கூட்டமைப்பு அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட காணாமற்போனோரின் உறவினர்கள் முடிவு!

jaffna_missingrelative_protestகாணாமற்போனோர் தொடர்பில் தெளிவுபடுத்தல்களை வழங்குமாறு கோரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக காணாமற்போன உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கம் அறிவித்துள்ளது.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள குறித்த சங்கம், காணாமற்போனவர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை செய்து முடிவை அறிவிப்பதாக கூறி தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தவர்கள், வாக்குகளை பெற்றுக்கொண்டு அதன் பின்னர் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.

காணாமற்போனவர்கள் முற்றுழுழுதாக இறந்திருக்கலாமென அண்மையில் யாழ் தேசிய பொங்கல் விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து, அன்றைய பொங்கல் விழாவில் கலந்துகொண்ட உறவுகள் மனதில் கனத்த வேதனையை ஏற்படுத்தியதாக வவுனியா மாவட்ட காணாமற்போன உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கத்தின் தலைவி ஜெயவனிதா காசிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

தமது உறவுகளின் உண்மையான நிலைப்பாட்டை அறியும் நோக்கில் இந்த முற்றுகை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதற்கு அனைத்து அமைப்புகளும் ஆதரவு வழங்கவேண்டும் என்றும் அவர் மேலும் கோரியுள்ளார்.

-puthinamnews.com

TAGS: