தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளது: ரணில்

ranil_praminister_001தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் ஆரோக்கியமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“இலங்கை புதிய பாதையில் பயணிக்கின்றது. ஆசியாவிலே முதற் தடவையாக இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து இங்கு நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆசியாவைப் பொறுத்த அளவில் இதுவொரு பாரிய சவாலை வெற்றி கொண்டதற்கு சமமானதாகும். இந்ததேசிய அரசு உதயமானதன் பின்னர் மக்களுக்கு பல்வேறுபட்ட நன்மையான பணிகளை முன்னெடுத்திருக்கின்றது. மக்களின் பிரதான பிரச்சினைகள் பலவும் தீர்க்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு சுவிட்சர்லாந்துக்குச் சென்றிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டார். அதன்போதே, மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் ஜனநாயகம் கேள்விக்குறியாக இருந்த கால கட்டத்தில் நாட்டை மீட்டெடுத்து நல்லாட்சியின் மூலம் ஜனநாயகத்தை மலரச் செய்ய முடிந்துள்ளது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த, அல்லது வெளியேற்றப்பட்ட வடக்கு கிழக்கு மக்களை மீளக்குடியமர்த்துவதிலும், நல்லிணக்கச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லவும் முடிந்துள்ளது. நாட்டுக்குத் தேவையான பொருளாதார மாற்றம் மற்றும் அரசியல் மாற்றத்திற்கான பலமுன்னேற்பாடான திட்டங்களில் ஆரம்ப வெற்றியை ஈட்டிக் கொண்டிருக்கின்றோம்.

அதேபோன்று, அரசியலமைப்பினூடாவே ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. காலத்துக்குக் காலம் தேர்தல்கள் மூலம் அரசுகள் மாறி ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் எக்காலத்திலும் மாற்றம் காண முடியாத தேசிய கொள்கைத் திட்டத்தை தயாரிப்பதில் எமது அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.” என்றுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: