மெக்சிக்கோ சிறைக்குள் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்: 52 பேர் பலி; 12 படுகாயம்

Mexico_1917மான்டெர்ரி: மெக்சிக்கோ நாட்டில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நடந்த கடும் மோதலில் 52 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மான்டெர்ரி நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது.

இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் திடீரென கைதிகளுக்கு இடையே பயங்கர கலவரம் மூண்டது. கைதிகளுக்குள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகளையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த பயங்கர கலவரத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்பட 52 பேர் பலியாகினர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கலவரத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்காத நிலையில், சிறையில் இருந்து கைதிகள் சிலர் தப்பிக்க முயன்ற போது ஏற்பட்ட வன்முறையே இந்த கலவரத்துக்கு காரணம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே கலவரம் குறித்து அறிந்ததும், அந்த சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு வெளியே திரண்டு கதறி அழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

tamil.oneindia.com