மகாதிர்: நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால்தான் பதில் கூறுவேன்

 

M-goahead1சட்டத்துறை தலைவர் (ஏஜி) பிரதமர் நஜிப்பை பாதுகாக்கிறார் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் அவரது வலைத்தளத்தில் கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு தாம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் மட்டுமே பதில் கூறுவேன் என்று மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மகாதிர் அவரது வலைத்தளத்தில் ஏஜி முகமட் அபாண்டி அலி குறித்து செய்திருந்த பதிவு குறித்து அவரை இன்று புக்கிட் அமானைச் சேர்ந்த நான்கு போலீசார் விசாரித்தனர்.

“அந்தக் கட்டுரை குறித்த போலீஸ்காரர்களின் கேள்விகளுக்கு நான் பதில் கூறவில்லை, ஏனெனில் நான் (குற்றம் சாட்டப்பட்ட பின்னர்) விசாரணையின் போது நீதிமன்றத்தில் பதில் அளிக்க விரும்புகிறேன்”, என்று மகாதிர் கூறினார்.

தமது வலைத்தளத்தில் எழுதியிருந்ததற்காக தாம் சிறைக்குச் செல்லத் தயார் என்று அவர் மேலும் கூறினார்.