தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வேதனம் ஏன் வழங்க முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

vikneshwaran_002சாதாரண கூலி வேலைக்கான குறைந்தபட்ச வேதனமாக 1,000 ரூபாய் இந்நாளில் வழங்கப்படும் நிலையில்,

எமது நாட்டின் வளத்தை பெருக்குவதற்கு உழைத்து வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் வேதனம் ஏன் வழங்க முடியாது?, என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சம்பள உயர்வு கோரி தொடர் போராட்டத்தில் குதித்துள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நிலை தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “மேற்படி தமது சம்பளக் கோரிக்கையை வலியுறுத்தி மலையகத்தில் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து கொண்டு கடந்த 12 தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் கோரிக்கைகள் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான கோரிக்கைகள் என்ற அடிப்படையில் அதனை மனிதாபிமான ரீதியில் அணுகுமாறு நாங்கள் அரசையும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தையும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

தமக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வும் 18 மாதங்களுக்கான சம்பள நிலுவையும் வாரத்தில் 06 நாட்கள் தொழிலும் கிடைக்கப் பெறுவதை உத்தரவாதம் செய்தாலே அன்றி, தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்ற நிலையில் நாளொன்றுக்கு 730 ரூபாய் என்ற ரீதியில் சம்பளத்தை மாற்றியமைக்க தோட்டத் தொழிலாளர்கள் சங்கமும் முதலாளிமார் சம்மேளனமும் இணங்கியிருப்பது திருப்தியளிப்பதாக இல்லை.

இந்த நாட்டின் வருமானத்தை ஈட்டிக் கொடுக்கின்ற தொழில்களில் முன்னிலை வகிக்கக்கூடிய தேயிலை உற்பத்தி தொழிற்துறையின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய தோட்டத் தொழிலாளர்கள் அவர்களின் இருப்பிட வசதிக் குறைவுகள், குழந்தைகளின் பாடசாலை வசதியின்மை, சீதோஷ்ண நிலை போன்ற இன்னோரன்ன இடையூறுகளுக்கு மத்தியில் எமது நாட்டின் வளத்தை பெருக்குவதற்கு உழைத்து வரும் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் பெருந்தன்மையுடன் நோக்கப்படவேண்டியவை.

பயிற்சி பெறாத ஒரு கூலியாள் கூட குறைந்தபட்ச நாட் கூலியாக 1,000 ரூபாயை பெறுகின்ற இச்சந்தர்ப்பத்தில் தோட்டத் தொழிற்றுறையில் பயிற்சி பெற்ற இவர்களுக்கு நாளாந்த அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கூடிய அளவுக்கு அவர்களின் சம்பளங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும்.

அவர்களின் கோரிக்கையான 6 நாட்கள் தொழில் கிடைக்கப் பெறுவதையும் உறுதி செய்வதற்கு அரசு ஏற்ற நிர்வாகங்களுடன் கலந்துரையாட வேண்டும். நலிந்துபோன நிலையில் வாழுகின்ற இம்மக்கள் இந்நாட்டின் ஒரு சாதாரண குடிமகனுக்கு இருக்கக்கூடிய சலுகைகளுக்கும் வசதிகளுக்கும் ஒப்பான வகையில் அவர்களின் சம்பளங்களைத் திருத்தி அமைத்து வழங்க பெருமனதுடன் முன்வர வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் வெற்றிபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” என்றுள்ளது.

-http://www.puthinamnews.com

TAGS: