தொடரும் அவலம்..! 250 பேர் கடலில் மூழ்கிப் பலி

africa_migrants_boatசட்டவிரோதமாக அகதிகளை ஏற்றி வந்த இரண்டு படகுகள் இத்தாலி கடலில் மூழ்கியதில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இத்தாலியின் லம்பேடுசா தீவை அண்மித்த பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்த படகு கடலில் மூழ்கியதில் 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தின் போது 39 பேர் மட்டுமே தப்பித்து லம்பேடுசா தீவை அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இத்தாலி கடற்பரப்பில் மற்றுமொரு படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது 140 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும், குறித்த படகில் பயணித்த இரண்டு பேர் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலிக்கான ஐ.நா.அகதிகளுக்கான முகவர் நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு யுத்தம் மற்றும் ஸ்தீரமற்ற அரசியல் போன்ற காரணிகளினால் சிரியா மற்றும் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு கடல்வழியாக பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு செல்லும்போது அடிக்கடி ஏற்படும் படகு விபத்துகளினால் நூற்றுக்கணக்காக அகதிகள் ஒரே நேரத்தில் உயிரிழக்கும் சோகமான சம்பவம் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com