அரசு கஜானா பணத்தை சுருட்டிக்கொண்டு நாட்டை விட்டு தப்பிய ஜனாதிபதி

காம்பியா நாட்டில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்ற ஜனாதிபதி அரசு கஜானா பணம் முழுவதையும் சுருட்டிக்கொண்டு நாட்டை விட்டு தப்பியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காம்பியாவில் அண்மையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றுள்ளது.

காம்பியா நாட்டிற்கு Yahya Jammeh என்பவர் கடந்த 22 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததும் ‘தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது. இதில் சதி நடந்துள்ளது’ என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்குட்பட்டு நேர்மையாக நடந்துள்ளது என மாகாணத் தலைவர்கள் பேச்சு வார்த்தையின் இறுதியில் கூறியுள்ளனர்.

மேலும், தேர்தலில் தோல்வியுற்றதால் ராணுவத்தால் தனக்கு ஆபத்து வரலாம் என எண்ணிய Yahya Jammeh, நாட்டை விட்டு தப்புவதற்கான திட்டத்தில் இறங்கியுள்ளார்.

இதன் முதற்கட்டமாக அரசு கஜானாவில் இருந்த கோடிக்கணக்கான பணத்தையும் சுருட்டிக்கொண்டு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர், கடந்த சனிக்கிழமை இரவில் தனக்கு சொந்தமான சொகுசு கார்களையும் விமானத்தில் ஏற்றி அந்நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தற்போது ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள Adama Barrow-வின் அரசு ஆலோசகர் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

மேலும், அரசு கஜானாவில் காணாமல் போன சொத்துக்கள் அனைத்தையும் மதிப்பிட்ட பிறகு முன்னாள் ஜனாதிபதி மீதான சட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com