தாயகத்தை மீட்டெடுக்க விரும்பும் கனேடிய தமிழர்கள்!

இலங்கையில் 30 வருடங்களாக நீடித்த போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், தாயகத்தை மறுசீரமைப்பு செய்வதில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்வமாக உள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

டொரான்டோவை தளமாக கொண்ட தமிழ் வர்த்தகர்கள், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை புனரமைப்பதுடன் இலங்கையில் சமகால அரசாங்கத்திற்கு ஆதரவினை வழங்குவதும் முதலீட்டாளர்களின் நோக்கமாகும்.

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் நாட்டிலுள்ள வர்த்தகர்களுடன், டொரான்டோ முதலீட்டாளர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

தாயகத்தில் மேற்கொண்ட யுதத்திற்கு அரசாங்கம் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்திய தமிழ் முதலீட்டாளர்கள், இன்னுமொரு யுத்தம் இடம்பெறுவதை விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கடந்த 23ம் திகதி ஸ்கார்பரோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, கனடா இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இணைத் தலைவரான குலா செல்லத்துரை இதனை வலியுறுத்தினார்.

இதேவேளை குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட JC கிரில் ஹவுஸின் குழுவின் இணைத் தலைவரான ஸ்டான் முத்துலிங்கம் கருத்து வெளியிட்டார்.

புலம்பெயர்ந்து வாழும் நாம் 35 வருடங்களாக போராட்டத்திற்கு உதவி புரிந்தோம்.

ஆனால் 2009ல் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதுடன், தமிழீழ விடுதலை புலிகளையும் இலங்கை அரசாங்கம் தோற்கடித்தது.

இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை நிறுத்துமாறு வலியுறுத்தி இலங்கையின் பொருட்களை புறக்கணித்தோம். இதற்காக டொரொன்டோவின் அதிவேக நெடுஞ்சாலையை வழிமறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் இறுதி இராணுவப் பிரச்சாரத்தை மேற்பார்வையிட்ட அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவினால் தோற்கடிக்கப்பட்டார், அதன் பின்னர் டொரொன்டோ புலம்பெயர்ந்த உறவுகள் கணிசமாக முன்னேற்றம் கண்டனர்.

தற்போது இலங்கை பாரிய முன்னேற்றங்களை அடைந்து வருவதை அங்கு செல்லும் போது காண முடிகிறது.

கடந்த கால சிங்கள அரசாங்கங்கள் தமிழர்களை அடக்கி ஆழ்வதில் குறியாக இருந்தனர். தமிழர்கள் மீது அதிகாரங்களை திணித்தனர்.

ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பு புலம்பெயர் தமிழர்களின் உதவியை சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.

தற்போதைய நிலையில் இந்த அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டிய கடமை எமக்கு உள்ளது.

கனடாவில் கற்றுக் கொண்ட செயற்பாட்டு பொருளாதாரம் பற்றிய எங்களுடைய அறிவு தாயகத்திற்கு தேவை.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து மீட்க முடியும். அவர்களின் வாழ்வை மேம்படுத்த எங்களால் முடியும் என முத்துலிங்கம் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இந்த மக்களுக்கு அதை கடக்க உதவ முடியும், மற்றும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரி விடுமுறைகளை வழங்குவதோடு, நீண்ட குத்தகைகளுக்கு காணிகளை வழங்குகிறது.

கடந்த அரசாங்கங்களை போல் அல்லாமல் தற்போதைய அரசாங்கம் வடக்கை மீளவும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்கின்றது என சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தகர் கணேசன் சுகுமார் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் எங்களை ஏமாற்றவில்லை. அவர்கள் எங்களிடம் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள், எங்களுக்கு உதவுவதற்கு அவர்கள் விரும்புகிறார்கள், “என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு வர்த்தக சமூகமாக, அரசியல் பக்கத்தைப் பற்றி பேச முடியாது, ஆனால் இப்பகுதியின் மக்களுக்கு உதவ முடியும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ள முதலீடுகள் தொடர்பில் 21 கனேடிய முதலீட்டாளர்கள், அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

-tamilwin.com

TAGS: