ரான்சம்வேர் இணைய தாக்குதல்: 99 நாடுகளில் உள்ள கணினிகள் பாதிப்பு

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, ஓர் மிகப்பெரிய இணைய தாக்குதல்களை தொடுக்கும் வல்லமை கொண்ட கருவிகளை கொண்டு உலகமுழுவதும் உள்ள நிறுவனங்கள் மீது இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான பகுதிகளில் உள்ள கணினிகள் ஓர் கணினி ப்ரோகிராமால் தாற்காலிகமாக முடக்கப்பட்டு 300 டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், தி ஷேடோ பிரோக்கர்ஸ் என்ற கணினிகளை ஊடுருவும் ஹேக்கர்கள், இணைய தாக்குதல் தொடுக்கும் கருவிகளை திருடியதாகவும், இணையத்தில் வெளியிட்டுள்ளதாகவும் கோரி வந்தது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மார்ச் மாதம் தாக்கப்படுவதற்கான வாய்ப்பு குறித்து அறிந்து பேட்ச் எனப்படும் ஓர் மென்பொருளை வெளியிட்டது.

எவ்வளவு பெரியது இந்த தாக்குதல் ?

பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ரஷியா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் தைவான் உள்பட 99 நாடுகளில் இந்த இணைய தாக்குதல் நடந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இணைய பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட், ரான்சம்வேர் தாக்குதல் எனப்படும் பிணைத்தொகை கேட்கும் மென்பொருள் குறித்த தாக்குதல்கள் பற்றி உலகம் முழுக்க இதுவரை 75,000 புகார்கள் வரை பார்த்திருப்பதாக கூறியுள்ளது.

”இந்த எண்ணிக்கை மிகப்பெரியது,” என்று அவாஸ்டை சேர்ந்த ஜேகப் ரூஸ்டெக் கருத்து தெரிவித்துள்ளார்.

நிகழ்வுகள் பார்ப்பதற்கு ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருப்பதை போன்று தோன்றுகிறது என்றும், ஆனால் குறிப்பிட்ட இலக்குகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல் இது அல்ல என்றும் பல ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ரான்சம்வேர் தாக்குதலுடன் தொடர்புடையதாக கருதப்படும் பிட்காயின் எனப்படும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தப்படும் சேவையில் உள்ள கணக்குகளில் பணம் குவிய தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

யாரெல்லாம் இதில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் ?

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மீது இணைய தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் WannaCry ப்ரோகிராமின் திரைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகளை திருப்பி அனுப்பவும் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அலோசனை நேரத்தை ரத்து செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மற்ற ஒற்றை தனி நாடுகளை காட்டிலும் ரஷ்யா அதிகளவிலான இணைய தாக்குதல்களை கண்டுள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன.

ஜெர்மனியில் ஓர் உள்ளூர் ரயில்வே பயணச்சீட்டு இயந்திரம் உள்பட பாதிப்படைந்த கணினிகளின் புகைப்படங்களும்,இத்தாலியில் ஓர் பல்கலைக்கழக கணினி ஆய்வகத்தின் படமும் பொதுமக்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

ஸ்பெயினில் உள்ள நிறைய நிறுவனங்கள் இந்த இணைய தாக்குதலால் பாதிப்படைந்துள்ளன.

– BBC – Tamil