ஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும்: சம்பந்தன்

maith_sambநாட்டின் ஆட்சி முறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரமே நிரந்தர சமாதானமும் சமத்துவமும் ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் திடலில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியுள்ளதாவது, “முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்கள் அனைவருக்கும் எமது அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.

யுத்தத்திற்கான காரணம் என்ன? அந்த யுத்தத்தின் உண்மையான குறிக்கோள் என்ன? அந்த குறிக்கோளை அடைந்திருக்கின்றோமா? மாற்றம் ஒன்று வேண்டுமா? அவ்வாறு மாற்றம் வேண்டும் என்றால், அதற்கு என்ன வேண்டும்? இப்படியான கேள்விகளுக்கு இந்த நிகழ்வு பதிலளிக்கவேண்டும்.

இதற்கு ஆரம்பம் முதல் உண்மை நிலையை அறிய வேண்டும். அந்த உண்மையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சமாதானம் ஏற்பட வேண்டும். இப்படியான யுத்தங்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

நாட்டின் ஆட்சி முறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரமே நியாயமானதும், சமத்துவம் மிக்கதுமான சமாதானம் ஏற்படக்கூடியதாக இருக்கும்.

இந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வை நாட்டு மக்கள் மாத்திரமல்ல சர்வதேச சமூகமும் பார்த்துக்கொண்டு இருக்கின்றது. அவர்கள் இந்த நிகழ்வு ஏன் நடை பெறுகின்றது கேள்வி எழுப்புகின்றனர்.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: