ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு; 5 பேர் பலி

Afghanistan-5-killedஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க தூதரகம் அமைந்து உள்ளது. அதன் அருகில் மசூத் சதுக்கம் என்கிற இடம் உள்ளது. இங்கு வங்கிகள் மற்றும் வணிகவளாகங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் இந்த இடம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல் அங்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பாதுகாப்புபடை வீரர்கள் பலர் தங்களது சம்பள பணத்தை எடுப்பதற்காக அங்கு உள்ள ஒரு தனியார் வங்கிக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. மக்கள் அனைவரும் அலறிஅடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர்.

இருப்பினும் குண்டுவெடிப்பில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் மீட்புபடையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

-dailythanthi.com