டோனி புவா: ஐபிஐசி கடன்களை, 1எம்டிபி-ஆல் எப்படி செலுத்த முடியும்?

tony-11சர்வதேசப் பெட்ரோலிய முதலீட்டு நிறுவனத்தின் (ஐபிஐசி)  1எம்டிபி நிலுவைக் கடனை அடைக்க வரி செலுத்துவோரின் பணம் பயன்படுத்தப்படுமா என பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா இன்று கேள்வி எழுப்பினார்.

பலமுறை கேட்டும், 1எம்டிபி மற்றும் நிதி அமைச்சும் வாய்மூடியே கிடக்கின்றன, பணம் எங்கிருந்து வருமென இன்னும் அவர்கள் கூறவே இல்லை என்றார் அவர்.

“நிதி எங்கிருந்து வருகிறது என்பதை வெளிபடுத்த அவர்கள் ஏன் மறுக்கிறார்கள்,” என அவர் கேள்வி எழுப்பினார்.

“அக்கடன்களைத் திருப்பிச் செலுத்த, நிதி அமைச்சு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதிகளை விரிவாக்கியுள்ளதால், நமது கேள்விகளுக்குப்  பதிலளிக்க மறுக்கிறார்களா?”

“நிதி அமைச்சு தெளிவாக விளக்கம் தரும்வரை, தங்கள் வரி பணத்தைப் பயன்படுத்தியே 1எம்டிபி கடன்கள் அடைக்கப்படுகிறது என்று மக்கள் எண்ணுவதை நாம் குற்றம் சொல்ல முடியாது,” என அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று, காலாவதியாகும் தேதிக்கு ஒருநாள் முன்னர், தாங்கள் 1எம்டிபி-யிடமிருந்து பணத்தைப் பெற்றுவிட்டதை, லண்டன் பங்குச் சந்தையில் ஐபிஐசி உறுதி செய்துள்ளது.

இருப்பினும், பெற்ற தொகையை அது வெளியிடவில்லை.

முன்னதாக, தொடர்ச்சியான சில செயல்திட்டங்களின் வழி, கடன்கள் செலுத்தப்படுவதாக 1எம்டிபி கூறியது நம்பத்தகுந்ததாக இல்லையென புவா குறிப்பிட்டார்.

“இவ்வாண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், 1எம்டிபி முதலீட்டு நிதி பிரிவில் இருந்து நிதி வரும் என்று 1எம்டிபி கூறியது. இருப்பினும், அமெரிக்க நீதித்துறை 1எம்டிபி முதலீட்டு நிதி ஒரு மோசடி என்று கூறியபின், அவர்களது அறிக்கைகளில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதை அவர்கள் தவிர்த்துவிட்டனர்,” என்று டோனி புவா மேலும் விளக்கப்படுத்தினார்.