5 கோடி கிலோ திறனுள்ள அணுகுண்டை இரகசியமாக பரிசோதித்த வடகொரியா

northkorea_ricket_001சர்வதேச தடையையும் மீறி வடகொரியா பரிசோதித்த அணுகுண்டின் அழிக்கும் சக்தி சுமார் 5 கோடி கிலோ என தென்கொரியா குறிப்பிட்டுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை அணுகுண்டுகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.

இந்நிலையில், வட கொரியா நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு இடையில் உள்ள சுங்ஜிபேகாம் பகுதியில் (உள்ளூர் நேரப்படி) நேற்று பகல் 12.36 மணியளவில் சக்தி வாய்ந்த அணுகுண்டினை பூமிக்கு அடியில் வடகொரியா பரிசோதித்ததாகவும் இதன் விளைவாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த பரிசோதனைக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தாங்கள் நடத்தியது அணுகுண்டு பரிசோதனை அல்ல, ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை நடத்தினோம் என வடகொரியா சாதித்து வரும் நிலையில், நேற்று வடகொரியா பரிசோதித்த அணுகுண்டின் அழிக்கும் சக்தி சுமார் 5 கோடி கிலோ என தென்கொரியா குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தென்கொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் நேற்று பரிசோதிக்கப்பட்ட அணு குண்டு 50 கிலோ டன் அளவிலான அழிவாற்றலை கொண்டது (ஒரு கிலோ டன் என்பது பத்து லட்சம் கிலோ அளவிலான அழிவாற்றலை கொண்டது) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வடகொரியா நடத்திய அணுகுண்டு பரிசோதனையை விட நேற்று நடத்தப்பட்ட பரிசோதனை ஐந்து மடங்கு பெரியதாகும்.

1945-ம் ஆண்டு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின்மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டைவிட நேற்று நடத்திய பரிசோதனையின் போது வடகொரியா பயன்படுத்திய அணுகுண்டின் ஆற்றல் மூன்று மடங்கு அதிகமானதாகும் என தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

-tamilwin.com