ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளதாக ஆங் சான் சூச்சி தகவல்

suu kee

மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள ரோஹிஞ்சா நெருக்கடி தொடர்பாக, அந்நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சி முதல்முறையாக தெரிவித்துள்ள கருத்தில், தன்னுடைய அரசு ரக்கைன் மாநிலத்திலுள்ள அனைவரையும் பாதுகாத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், பயங்கரவாதத்தின் நலன்களை ஊக்குவிக்கும் மோதல் பற்றி பரப்பப்படும் “மிக பெரிய பனிப்பாறை போன்ற தவறான தகவல்களை” அவர் விமர்சித்துள்ளார்.

துருக்கி அதிபர் ரசெப் தாயிப் எர்துவானோடு தொலைபேசியில் பேசியபோது ஆங் சான் சூச்சி இந்த கருத்துக்களை கூறியதாக ஆங் சான் சூச்சியின் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

மியான்மரின் வடக்கிலுள்ள ரக்கைன் மாநிலத்தில் இருந்து கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேலான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வெளியேறி வங்கதேசம் சென்றுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற தொடர் மோதல்களால், பலர் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

மியான்மரில் சித்ரவதை அனுபவிக்கின்ற, பெரும்பாலும் சிறுபான்மை முஸ்லிம்களாக இருக்கும் நாடற்றவர்கள்தான் ரோஹிஞ்சாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறைகள் பற்றி நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தது பெரும் விமர்சனத்திற்குள்ளானது.

உள்ளூர் ஊடகத்தில் வெளியான சமீபத்திய அரசு அறிக்கையில், ரக்கைன் மாநிலத்திலுள்ள எல்லா மக்களையும் பாதுகாக்க தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளை ஏற்கெனவே எடுத்துள்ளதாக துருக்கி அதிபர் எர்துவானிடம் ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார்.

“மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக பாதுகாப்பு மறுக்கப்படுவது பற்றி பிறரை விட எங்களுக்கு நன்றாகவே தெரியும்” என்று ஆங் சான் சூச்சி கூறியதை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, எங்களுடைய நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பையும், உரிமைகளையும் பெறுவதை உறுதிப்படுத்துகின்றோம்.. அரசியல் உரிமை மட்டுமல்ல. சமூக மற்றும் மனித நேய பாதுகாப்பையும் வழங்குகின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.

வேறுபட்ட சமூகங்களிடையே பிரச்சனைகளை உருவாக்கவும், பயங்கரவாதிகளின் நலன்களை ஊக்குவிக்கவும், மிக பெரிய பனிப்பாறை போன்ற தவறான தகவல்களும், போலியான செய்தி புகைப்படங்களும் பரப்பப்படுவதாகவும், இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிஞ்சா மக்கள் இடம்பெயரக் காரணம் என்ன?

சமீபத்திய போராட்டம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் நாள் ரோஹிஞ்சா ஆயுதப்படையினர் மியான்மரின் காவல் நிலைகளை தாக்கியதால் தொடங்கி, ராணுவ பதில் தாக்குதல் நடத்தியதால் அகதிகள் பலர் எல்லையிலுள்ள வங்கதேசத்தை நோக்கி தப்பியோடும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

தங்களுடைய இடத்தை விட்டு வெளியேறியவர்கள் பலரும், ரக்கைனிலுள்ள பௌத்த கும்பல் தங்களுடைய கிராமங்களை அழிப்பதாகவும், அவர்களை நாட்டை விட்டு விரட்டும் வகையில், குடிமக்களாகிய அவர்களை கொலை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொது மக்களை தாக்குகின்ற ரோஹிஞ்சா ஆயுதப் படையினருக்கு எதிராக போரிடுவதாக மியான்மர் ராணுவம் தெரிவித்திருக்கிறது.

தீவிரமடைந்து வரும் இந்த ரோஹிஞ்சா நெருக்கடிக்கு எடுக்கப்படும் பதில் நடவடிக்கை தொடாபாக நோபல் பரிசு பெற்றவரும். மியான்மரின் நடைமுறை தலைவராக செயல்பட்டு வருபவருமான ஆங் சான் சூச்சி கடுமையாக விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறார்.

முன்னதாக, ரக்கைன் மாநிலத்தில் பிரச்சனைகள் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ள ஆங் சான் சூச்சி, ரோஹிஞ்சா இன மக்கள் அங்கு படுகொலை செய்யப்படுவதை மறுத்துள்ளார்.

தொடரும் நெருக்கடியில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

அவரை போல நோபல் பரிசு பெற்றுள்ள பலரும் சமீபத்திய ஏற்பட்டுள்ள இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர ஆங் சான் சூச்சி செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தப் பிரச்சனையில், தான் தலையிட வேண்டியிருக்கும் என்று மனித உரிமைகளுக்கான மியான்மரிலுள்ள ஐநாவின் சிறப்பு அதிகாரி இந்த வாரம் கூறியுள்ளார்.

ஆங் சான் சூச்சியின் நோபல் பரிசு பறிக்கப்படவேண்டும் என்று சிலர் கோரியுள்ளனர். -BBC_Tamil