இனப்பிரச்சினைக்கு 70 வருடங்களாக தீர்வு காண முடியவில்லை: ரணில்

நாட்டில் கடந்த 70 வருட காலத்தில் பொருளாதார சுபீட்சத்தையும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வையும் அடைய முடியாமல் போனதே எமது பாராளுமன்ற முறைமையிலும் ஜனநாயகத்திலும் உள்ள குறைபாடாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுபீட்சத்தையும் சௌபாக்கியத்தையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு முதலில் பிரதான தேசிய பிரச்சினையான இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காண வேண்டும். அதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசியல் தீர்வையும் ஐக்கியத்தையும் நாம் இன்னும் இந்த நாட்டில் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. 70 வருடங்கள் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து சாதனை நிலைநாட்டியுள்ளோம்.

ஆசியாவில் முதலாவது சட்டவாக்க சபையாக இலங்கை செயற்பட்டுள்ளது. 1927இல் தேர்தல் ஊடாக உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டனர். 116 வருட பாராளுமன்ற சம்பிரதாய பயிற்சி கிடைத்தது. முதலாவது பாராளுமன்றத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க டி.எஸ்.சேனாநாயக்க, எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க, ஜி.ஜி,பொன்னம்பலம் அடங்கலான தலைவர்கள் பங்களித்திருந்தார்கள். 2015ஆம் ஆண்டின் பின்னர் பாராளுமன்றத்தை பலப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

நான் இந்த சபையில் முன்வைத்த பிரேரணையில் சுபீட்சமும் சௌபாக்கியமும் உருவாக வேண்டும் என்று கூறியுள்ளேன். கடந்த 70 வருடங்களில் அவற்றை அடைய தவறியுள்ளோம். அது தான் எமது கவலை. 70 வருடம் குறித்து பெருமை அடையும் அதேநேரம், கவலைப்படுவதற்கான விடயமும் இருக்கிறது.

இலங்கையர் என்று ஒற்றுமையுடன் 1948ஆம் ஆண்டு ஆரம்பமானது. சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் இலங்கையர்கள் என்ற உணர்வுடனேயே அன்று இருந்தனர். எனினும், 60 வருடங்களாக இந்த நாட்டில் இனப் பிரச்சினை இருந்து வருகிறது. ஆயுதமேந்திய வன்முறை மற்றும் பிரிவினைவாதம் இருந்தது. யுத்த நிலைமைக்கு சமூகம் தள்ளப்பட்டது. இருந்த போதும், இவை அனைத்திலும் இருந்து நாம் ஜனநாயகத்தை காப்பற்றினோம். ஏனென்றால், ஜனநாயகத்தை இல்லாமல் செய்யவே பயங்கரவாதம் முயற்சித்தது.

அரசியல் தீர்வையும் ஐக்கியத்தையும் நாம் இன்னும் இந்த நாட்டில் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் அபிவிருத்தி அடைந்த நாடாவதற்கு நாம் தவறியுள்ளோம். 1977ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரம் ஏற்படுத்தப்பட்டாலுமே கூட, அதனால் எதிர்பார்க்கப்பட்ட பிரதிபலன்களை யுத்தத்தின் காரணமாக பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. இதனால், ஏனைய நாடுகள் எம்மை முந்தி சென்றுவிட்டன.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: