இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெறும் தருணத்தை எட்டியுள்ளோம்: எம்.ஏ.சுமந்திரன்

எழுபது வருடங்களாக நீண்ட தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெறும் தருணத்தை எட்டியுள்ளோம் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“பிளவுபடாத நாட்டிற்குள் சமனான அதிகாரப்பகிர்வுகளை வலியுறுத்தியுள்ளோம். இதில் வெற்றியடையலாம். வெற்றியடைவதற்காகவே பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எமது வெற்றிக்கு மக்களின் ஆதரவு வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையின் விவாதம் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்றன. விவாதத்தின் போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் கொண்டு வந்த அரசியலமைப்பு வரைபினை ஏற்றுக்கொள்வேன் என அமைச்சர் டிலான் சொன்னதுடன், வரைபிற்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென்றும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த வரைபிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளம் அமைச்சர்கள் ஆதரவளிப்பார்கள் என நினைக்கின்றேன். அதிகாரப் பகிர்வினை அர்த்தமுள்ளதாக மாற்றுவேன் என மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு எழுத்தில் வாக்குறுதியளித்தவர். இப்பொழுது அதிகாரப்பகிர்வைத் தவிர்த்து மற்றவிடயங்களை செய்வோம் என்று பேசுவதில் இருந்து அவர்களின் நோக்கு எவ்வாறு இருக்கின்றது.

சிங்கள மக்கள் மத்தியில் திரும்பவும் பயத்தினை ஏற்படுத்தி, இந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் நாடு இரண்டாக பிளவடைந்து விடும் என்ற கருத்தை சொல்லி, பயத்தை ஏற்படுத்தும் தந்திரோபாயத்தை கடைப்பிடிக்கின்றார்கள். இதுவரையில் நாட்டில் அவ்வாறான பயம் எழும்பவில்லை. அவ்வாறான ஒரு நிலமையை ஏற்படுத்த பாடுபடும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாங்கள் உதவியாக இருந்து விடக்கூடாது.

எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், மக்களின் கருத்துக்களை திடமாக சொல்லவேண்டி இருந்தாலும் கூட அவை தெற்கில் பயத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. தெற்கில் பயப்படுவதற்கு நியாயமான காரணம் இருக்கின்றது.

3 தசாப்தங்களாக ஒரு தனி நாட்டிற்காக முன்னெடுக்கப்பட்ட போர் ஓய்ந்தது. அவை நீங்கிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. எமது மக்கள் எமக்குக் கொடுத்த ஆணை மிக மிகத் தெளிவானது. பிளவுபடாத நாட்டில் அதிகூடிய அதிகாரப் பகிர்வுடனான தீர்வைத் தான் எமது மக்கள் எமக்குக் கொடுத்த ஆணை. அவை அனைத்து விடயங்களையும் சேர்த்தே இந்த கருமத்தில் ஈடுபட்டிருக்கின்றோம்.

பிளவுபடாத நாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வலியுறுத்தியுள்ளது. நாடு பிளவுபடாமல் இருக்க வேண்டுமாயின், அதிகாரங்கள் முற்றுமுழுதாக பகிரப்பட வேண்டும். அவற்றை தெற்கில் உள்ள முதலமைச்சர்களும், அமைச்சர்களும் வலியுறுத்தியுள்ளார்கள்.

கொடுத்த அதிகாரப்பகிர்வுகளை மீளப் பெறக்கூடாது. அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். ஆளுநருக்கு அதிகாரங்கள் இருக்கக்கூடாது என்கின்ற கருத்துக்களும் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

70 வருட கால தேசிய இனப்பிரச்சினை தீர்வதற்கான சந்தர்ப்பம் இது. தீராமலும் விடலாம். தோல்வியில் முடிவடையலாம். அவ்வாறு தோல்வியில் முடிவடைவது, எமது செயற்பாட்டின் மூலம் தான் என எவரும் சொல்லாத வகையில், தான் இந்த விடயங்களில் ஈடுபட வேண்டும்.

வெற்றிகரமாக அமைவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும். அரைவாசி தூரத்திற்கு வந்திருக்கின்றோம். வந்த தூரத்திற்கு பெற வேண்டிய அரைவாசி விடயங்களையும் பெற்றிருக்கின்றோம். ஆகையினால், இவை தோல்வியில் முடிவடையுமென இப்போதே தீர்மானிக்கக்கூடாது.

வெற்றியில் முடிவடைய வேண்டும். வெற்றியிலேயே தான் முடிவடைய வேண்டுமென்ற நம்பிக்கையில் தான், செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எனவே, எமது மக்களின் பூரண ஆதரவு எமக்குக் தர வேண்டும்.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: