கஜேந்திரகுமாருடன் அரசியல் ரீதியாக இணைந்து செயற்படவில்லை – முதலமைச்சர்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அணியினருடன் தாம் அரசியல் ரீதியாக இணைந்து செயற்படவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார்.

முன்னதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,

“சந்திப்பில் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. அரசியல் ரீதியாகப் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

நான் ஒரு மக்கள் அமைப்பின் தலைவர் என்ற வகையிலும், அவர் அந்த மக்கள் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையிலும்,  கொள்கை ரீதியான சில ஒருமைப்பாடுடைய விடயங்கள் குறித்துமே பேச வந்தார்.” என்று தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் முயற்சியில் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் சிலர் புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதற்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆதரவை வெளிப்படுத்தாத நிலையில், மீண்டும் அவர் தமக்கும் அவர்களுக்கும் அரசியல் ரீதியான உறவுகள் ஏதும்  இல்லை என்று கூறியுள்ளார்.

-puthinappalakai.net

TAGS: