முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 7 பேருக்கு தலா 56 வருட கடுங்காவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 7 பேருக்கு தலா 56 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வில்பத்து தேசிய சரணாலயத்திற்குள் கிளைமோர் குண்டை வெடிக்கச் செய்து, மருத்துவர் உட்பட 7 பேரை கொலை செய்த குற்றத்தை ஏற்றுக் கொண்ட 7 பேருக்கு நீதிமன்றம் இந்த கடுங்காவல் சிறைத் தண்டனையை வழங்கி இன்று (புதன்கிழமை) தீர்ப்பளித்துள்ளது.

மன்னார், சாவகச்சேரி, வவுனியா, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் இந்த தண்டனையை பெற்றுள்ளனர்.

8 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரினால் வெவ்வேறாக இவர்கள் மீது குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வில்பத்து தேசிய சரணாலயத்தில் கெப் வாகனமொன்றை இலக்கு வைத்து 2006ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. -BBC_Tamil

TAGS: