அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இதுவரை சிந்திக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தான் இதுவரை சிந்தக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “வடக்கு கிழக்கில் இந்தத் தேர்தல் காலத்தில் என் பெயரை இழுத்து கட்சிகளின் சார்பிலும் தனிப்பட்ட வேட்பாளர்கள் சார்பிலும் நன்மைகளைப் பெற பலர் எத்தனிக்கிறார்கள் என்று தெரியவருகின்றது. எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றி நான் எந்தவித முடிவும் எடுக்காமலேயே என்னுடைய சின்னம் பற்றி எல்லாம் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

நான் ஏற்கனவே எனது கருத்துக்களை வெளியிட்டு விட்டேன். ஊழலற்ற, நேர்மையான, தகைமையுடைய, மக்களை நேசிக்கும் வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள் என்று கோரியுள்ளேன். உள்ளூராட்சியில் கட்சிகள் புகுந்ததால் இதுகாறும் எமது உள்ளூராட்சி மன்றங்கள் பலவிதமான சிக்கல்களை எதிர்நோக்கி வந்துள்ளன. இதேபோன்றுதான் முன்னர் அரசியல்வாதிகளும் அரசியலும் புகுந்து எமது கூட்டுறவுச் சங்களையும் சின்னாபின்னமாக்கி வைத்தன.

நான் இதுவரையில் எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றியோ, கட்சிச் சின்னம் பற்றியோ இப்போது சிந்திக்கவில்லை. எனது அரசியல் கொள்கைகள் கிட்டத்தட்ட தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஒத்தது என்று ஏற்கனவே கூறியுள்ளேன். அத்துடன் அக்கொள்கையானது, 2013ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைபபின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஒத்தது என்று கூறியுள்ளேன். தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்களுடன் ஒத்த கருத்துடையவர்களை நான் மதிக்கின்றேன்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: