பொலிஸ் காவலில் உள்ளவர்கள் மீது தொடர்ந்தும் சித்திரவதை: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டு!

பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ளவர்கள் மீது தொடர்ந்தும் சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பிலான முறைப்பாடுகள் தங்களுக்கு அடிக்கடி கிடைப்பதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய 2017ஆம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதிக்குள் கிடைக்கப்பெற்ற 5,614 முறைப்பாடுகளுள் ஆகக்கூடிய 1,174 முறைப்பாடுகள் தடுப்புக் காவலில் இருக்கும்போது முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்கம் என்று ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிக்கா உடகம தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்படி 249 முறைப்பாடுகள் சித்திரவதைகளை அடிப்படையாகக் கொண்டவை (பிரதானமாக பொலிஸ்), 171 முறைப்பாடுகள் துன்புறுத்தல்கள் (வடக்கில் புலனாய்வு அதிகாரிகள் சிவிலியன்களை துன்புறுத்தல்), 323 முறைப்பாடுகள் அச்சுறுத்தல்கள் (குறிப்பாக பொலிஸிடமிருந்து), 298 முறைப்பாடுகள் பலவந்தமாக கைது செய்து தடுத்து வைத்தல் ஆகியன தொடர்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இது பாரிய பிரச்சினையாகும். ஒரு புறம் நாம் கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றில் முன்னேற்றத்தை காண்கின்ற போதிலும் மறுபுறம் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்ச்சியாக வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இந்நிகழ்வுகளின் மூலம் பொலிஸ் செயன்முறைகளில் பாரிய மறுசீரமைப்பு அவசியம் என்பதை எமக்கு சுட்டிக்காட்டுகின்றது.” கலாநிதி தீபிக்கா உடகம கூறியுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: