போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுவை அமைக்குமாறு விக்னேஸ்வரனிடம் கோரிக்கை!

யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்றை அமைக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண சபையின் 115வது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியிலுள்ள பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில் மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் யாழ். மாவட்டத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டும் என கோரும் விசேட கவனயீர்ப்பு விடயம் ஒன்றை சபைக்கு கொண்டுவந்தார். அந்த கவனயீர்ப்பு விடயத்தின் மீது கருத்து தெரிவிக்கும்போதே உறுப்பினர்கள் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதன்போது உறுப்பினர் ஐயூப் அஸ்மின் கருத்து கூறுகையில், “யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக போதை பொருள் பாவனை அதிகரித்திருக்கின்றது. ஆனால் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை” என்றுள்ளார்.

தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் சு.சுகிர்தன் உரையாற்றுகையில், “பாடசாலைகளை இலக்கு வைத்து போதை பொருள் பாவனை பரப்பப்படுகின்றது. எனவே முதலமைச்சர் விசேட பொலிஸ் குழுவை நியமித்து போதை பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: