ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுகள் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில், இந்திய அரசாங்கத்தின் அவதானம் குறித்து மகிழ்ச்சியடைய முடியாதுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் தாரான்ஜித் சிங் சாந்துவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

வடக்கு, கிழக்கு இணைப்பே அங்கு வாழும் மக்களின் பிரச்சினைக்கு முதல் தீர்வு என தமிழ் தலைவர்கள், இந்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தி வந்த நிலையில், குறித்த இரு மாகாணங்களையும் இரண்டாக பிரித்து நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இலங்கையின் உள்ளகப் பிரச்சினை என்ற போதும், இந்திய அரசாங்கத்திற்கு இதில் தலையிட பெரும்பாலும் இடமிருந்ததாகவும், எனினும், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை எனவும் குறிப்பிட்ட வடக்கு முதலமைச்சர், இது எதனால் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே எனவும் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள புவியியல், அரசியல் முறை மற்றும் சமூக பொருளாதார, அமைப்பு என்பன இந்தியாவிலுள்ளது போன்றதே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இதுபோன்ற பிரச்சினைகளை தீர்ப்பதில் இந்தியா கடந்த காலங்களில் பின்பற்றிய முறையை இலங்கையும் பின்பற்ற முடியும் எனவும், ஆனால், இந்திய அரசாங்கம் இதன்பொருட்டு இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கும் அழுத்தம் போதுமானதல்ல எனவும் வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுஇவ்வாறு இருக்க, வடக்கு அபிவிருத்திக்கு தேவையான யோசனைகள் குறித்த அறிக்கை இதன்போது விக்னேஸ்வரனால், இந்திய உயர்ஸ்தானிகரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

-4tamilmedia.com

TAGS: