“87 மில்லியன் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது”

கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை நிறுவனத்தால், 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது.

இது, முன்னதாக வெளியிடப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாகும்.

அதில் 1.1 மில்லியன் பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள் என பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை முதலில் வெளிப்படுத்திய கிறிட்டோஃபவர் வேலி, 50 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக, தகவல்களை வழங்கும் தளத்தை ஃபேஸ்புக் வழங்குகிறது அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவர்களின் பொறுப்பு என முன்னர் கருதியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த மார்க் சக்கர்பர்க்,அத்தகைய குறுகிய எண்ணம், தவறான ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று எங்களுக்கு தெரிந்தவரை, நாங்கள் அதிகமான பொறுப்புகளை எடுத்து கொள்ள வேண்டும் என தெரிகிறது.

தகவல்களை வழங்கும் தளங்களை உருவாக்குவது மட்டும் எங்கள் பொறுப்பல்ல அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிப்பதும் எங்கள் பொறுப்பு என மார்க் தெரிவித்துள்ளார்.

தொடரும் பல சர்ச்சைகளுக்கு மத்தியில், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தலைமை தாங்குவதற்கு தான் சிறந்த நபர் என தெரிவித்துள்ளார் மார்க்.

குற்றச்சாட்டுகள்

கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

“நம்பிக்கை மீறல் நடைபெற்றுள்ளது” என தனது முகநூல் பதவில் தெரிவித்திருந்தார் மார்க் சக்கர்பர்க்.

“ஃபேஸ்புக்கை தொடங்கியது நான்தான் எனவே இதில் என்ன நடந்தாலும் நான்தான் பொறுப்பு” என்றும் அவர் தெரிவித்திருந்தார். -BBC_Tamil