தியாகி திலீபனின் நினைவுத் தூபியை புனரமைக்க யாழ். மாநகர சபை நடவடிக்கை!

நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலுடன் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபியை முன்னர் இருந்தவாறே அமைப்பது தொடர்பாக யாழ். மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் மற்றும் மாநகர ஆணையாளர் சத்தியசீலன் உள்ளிட்டோர் ஆராய்ந்துள்ளனர்.

ஈழத் தமிழர்கள் சார்பில் இந்திய அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் 15 நாள்கள் உணவு ஒறுப்புப் போராட்டத்தை நடத்தி 1987ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 26ஆம் திகதி வீரச்சாவடைந்த தியாக தீபம் திலீபனின் நினைவாக நல்லூரில் தூபி அமைக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபன் அகிம்சைப் போராட்டத்தை நடத்திய இடத்தில் அந்தத் தூபி அமைக்கப்பட்டது. அந்தத் தூபி அரச படைகளால் அழிக்கப்பட்டது. அதனை மீளவும் அதே வடிவில் சீரமைப்பது தொடர்பிலேயே நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஆராயப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆனோல்ட், உறுப்பினர்கள் ந.லோகதயாளன், தர்சானந் ஆகியோருடன் மாநகர ஆணையாளர், பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் நேரில் ஆராய்ந்தனர்.

திலீபனின் நினைவுத் தூபியை பழைய வடிவில் 23 அடி உயரத்தில் அனைவரும் புனிதம் பேணும் அமைக்கப்படும் என யாழ். மாநகர சபை முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்தார். எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் திலீபனின் நினைவு வாரத்தில் புதிய தூபியைத் திறக்கும் வகையில் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

-4tamilmedia.com

TAGS: