யூத இனப்படுகொலை: சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் பாலத்தீன தலைவர்

யூத மக்களை பற்றியும், யூத இனப்படுகொலை பற்றியும் தான் தெரிவித்த கருத்துகளுக்கு பாலத்தீன தலைவர் முகமது அப்பாஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

யூத இனப்படுகொலை, ‘வரலாற்றில் நிகழ்ந்த மிகவும் கொடியதொரு குற்றம்‘ என்று வெள்ளிக்கிழமை அவருடைய அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தில் தொடக்கத்தில், மேற்கு கரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய முகமது அப்பாஸ், ஐரோப்பாவில் யூதர்கள் பெருமளவில் கொல்லப்பட்டது யூத இன எதிர்ப்பால் இல்லை, அவர்களின் நிதி செயல்பாடுகளால் ஏற்பட்ட விளைவு என்று தெரிவித்திருந்தார்.

“வட்டி, வங்கி போன்றவைகளை” யூதர்களின் “சமூக செயல்பாடுகளாக” அப்பாஸ் விவரித்திருந்தார்.

பாலத்தீன தலைவர் முகமது அப்பாஸ் யூத இனப்படுகொலை பற்றி தெரிவித்த கருத்து, யூதர்களுக்கு எதிரானது என்று இஸ்ரேலிய அரசியல்வாதிகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கண்டித்திருந்தனர்.

அப்பாஸின் இந்த கருத்து யூதர்களுக்கு எதிராக இருப்பதாகவும், மறுக்கப்படும் பரிதாபமான கருத்தாக உள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுவின் செய்தி தொடர்பாளர் விமர்சித்தார்

“பண பரிமாற்றம் செய்த யூதர்கள்தான், இனப்படுகொலை நிகழ்வதற்கு காரணமென முகமது அப்பாஸ் கூறுகிறார். இஸ்ரேல் நிலத்தோடு யூதர்களின் தொடர்பை மறுத்துள்ளார். ஐரோப்பிய காலனியாதிக்க திட்டம் என்பதை குறிப்பிட்டுள்ளார். இப்போது ஓர் அமைதி பங்குதாரர் உள்ளார்” என்று இஸ்ரேலின் ராஜதந்திர துறையின் துணை அமைச்சர் மைக்கேல் ஓரின் டுவிட்டரில் கருத்து வெளியிட்டார்.

யூதர்களுக்கு எதிரான முகமது அப்பாஸின் இந்த கருத்தை நியூ யார்க்கிலுள்ள அவதூறு எதிர்ப்பு அமைப்பு கண்டித்திருந்தது.

இரண்டாம் உலகப்போரின்போது, ஐரோப்பாவிலுள்ள யூதர்களை ஒழித்துவிடும் முயற்சியில் ஜெர்மனி நாஜிக்கள், மக்களை பெருங்கூட்டமாக கொன்று குவிக்கும் மரண முகாம்கள் மூலம் சுமார் 60 லட்சம் யூதர்களை கொன்றனர்.

அடிப்படைவாத தேசியவாதத்தோடு, ஜெர்மனியின் “இன தூய்மை”க்கு யூதர்கள் அச்சுறுத்தலாக இருப்பதாக நாஜிக்கள் எண்ணினர்.

திங்கள்கிழமை மேற்கு கரையிலுள்ள ரமல்லா நகரில் பாலத்தீன விடுதலை அமைப்பின் சட்டபூர்வ அமைப்பான பாலத்தீன தேசிய பேரவை கூட்டத்தில் அப்பாஸ் உரையாற்றினார்.

யூத இனப்படுகொலை: யூதர்களுக்கு எதிரான அப்பாஸின் கூற்றால் சர்ச்சை

90 நிமிடங்கள் அரேபிய மொழியில் அப்பாஸ் ஆற்றிய உரை பாலத்தீன தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிப்பரப்பானது.

“யூத சியோனிய ஆசிரியர்களால்” என்று அவர் கூறிய புத்தகங்களின் அடிப்படையில், பாலத்தீனிய தலைவரின் பார்வையில் ஐரோப்பிய யூத வரலாற்றின் ஒரு பகுதியை அவரது உரை உள்ளடக்கியிருந்தது.

கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் பல நூற்றாண்டுகளாக படுகொலை செய்யப்பட்டனர். கடைசியில் யூத இனப்படுகொலையில் முடிவடைந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால், இது எதனால் ஏற்பட்டது? என்று அப்பாஸ் கேள்வி எழுப்பினார்.

“நாம் யூதர்கள் என்பதால், என்று அவர்கள் கூறுகிறார்கள். யூதர்கள் மீது பகைமை அவர்களின் மத அடையாளத்தால் ஏற்பட்டதல்ல, சமூக செயல்பாட்டால் ஏற்பட்டது என்று கூறுகின்ற மூன்று யூதர்களை, அவர்கள் எழுதிய புத்தகங்களோடு என்னால் கொண்டுவர முடியும்” என்று அப்பாஸ் பேசினார்.

அப்பாஸ் உரை

“இது வேறுபட்டதொரு பிரச்சனை. எனவே, ஐரோப்பா முழுவதும் பரவியிருந்த யூதர்களுக்கு மதத்திற்கு எதிரான பகைமை இருக்கவில்லை. ஆனால், நேர்மையற்ற பணம் கடன், நிதி பரிமாற்றம் போன்ற செயல்பாடுகளோடு தொடர்புடைய சமூக செயல்பாடுகளுக்கு எதிராக பகைமை ஏற்பட்டது” என்று அப்பாஸ் பேசினார்.

ஜெர்மனியிலும், ஐரோப்பாவின் வட-கிழக்கிலும் வாழும் யூதர்களான அஷகெனாஸி யூதர்களுக்கு, யூத மக்களோடு எவ்வித தொடர்பும் இல்லை என்பதையும் மறுத்துள்ள அப்பாஸ், அவர்களும் உண்மையிலேயே யூதர்கள் என்று கூறினார்.

அஷகெனாஸி யூதர்கள் இஸ்ரேலின் மிக பெரிய சமூகங்களில் ஒன்றாகும்.

தற்போதைய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு உட்பட பல பிரதமர்களை நீண்டகாலமாக தந்து வருகின்ற சமூகமாக இது இருந்து வருகிறது.

யூத இனப்படுகொலை தொடர்பாக பாலத்தீன தலைவர் தெரிவிக்கும் கருத்துக்கள் சர்ச்சையை உருவாக்குவது இது முதல்முறையல்ல.

-BBC_Tamil