சிலாங்கூருக்குத் தேவை இளம் மந்திரி புசார்

சிலாங்கூர்  மக்கள்   புதிய  மந்திரி  புசாருக்காகக்   காத்திருக்கும்   வேளையில்  அப்பொறுப்பை  ஓர்    இளம்   தலைவர்   ஏற்பது   பொருத்தமாக   இருக்கும்  என்று  கூறப்பட்டுள்ளது.

புதிய   மந்திரி   புசார்   ஹரி   ராயாவுக்குப்  பிறகு  ஜூலை  19-ல்   நியமிக்கப்படுவார்  என்று   தெரிகிறது.   ஆனால்,  பிகேஆர்   யாரைத்   தேர்ந்தெடுத்துள்ளது  என்பதுதான்   தெரியவில்லை.

சிலாங்கூர்  மந்திரி   புசார்   அஸ்மின்   அலி   மாநிலத்துக்கு   நிறைய   முன்னேற்றத்தைக்   கொண்டு   வந்துள்ளார்  என்றும்   அவரின்  இடத்தை   நிரப்புவது   கடினமாக    இருக்கும்   என்றும்  பிகேஆர்   இளைஞர்   துணைத்   தலைவர்  டாக்டர்   அபிப்  பஹார்டின்   மலேசியாகினியிடம்    கூறினார்.

“அவரின்  இடத்துக்கு   நியமிக்கப்படுபவர்   திறமைமிக்கவராக,  துடிப்பானவராக,   விரைவில்   எதையும்   கற்றுக்கொள்பவராக   இருத்தல்   வேண்டும்.

“மக்கள்,  மாநில   அரசு   சிறப்பாக   செயல்பட  வேண்டும்  என்று   மிகுந்த   எதிர்பார்ப்புடன்   உள்ளனர்”,  என  பினாங்கு   ஆட்சிக்குழுவில்    சுகாதாரம்,  விவசாயம்,  புறநகர்   மேம்பாடு  ஆகியவற்றுக்குப்  பொறுப்பாகவுள்ள   அபிப்   கூறினார்.