அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட 500 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு..

அமெரிக்காவில் கள்ளத்தனமான குடியேற்றத்தை தடுக்கும் வகையில் எல்லைப்பகுதிகளில் அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட 522 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜூன் மாதம் 20-ம் தேதி நிலவரப்படி, அவர்களுடன் வந்த 2053 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

டொனால்ட் டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என உலகளாவிய அளவில் எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கர்களில் பலரும் இதற்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

வெகுகுறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலினியா டிரம்ப், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மனைவி லாரா புஷ் உள்ளிட்டோரும் மனித உரிமை அமைப்புகள் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷன் தலைவர் ஸைட் ராட் அல் ஹுசைன் டிரம்ப்பின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளார். இதைதொடர்ந்து, குழந்தைகளை அகதிகளிடம் இருந்து பிரிக்கும் உத்தரவை டிரம்ப் ரத்து செய்தார்.

இந்நிலையில், எல்லைப்பகுதிகளில் அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட 522 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். குடியேற்றம் தொடர்பான காரணங்களன்றி, வேறுசில விவகாரங்களால் பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போர்ட் இஸபெல் குடியுரிமைத்துறை அலுவலகத்தில் பிரிக்கப்பட்ட குழந்தைகள் தொலைபேசி மூலம் பெற்றோருடன் தொடர்புகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனியாக அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-athirvu.in