அமர் சிங்: முழுப் பட்டியலும் நஜிப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது; அவருக்கு வேறு என்ன வேண்டும்?

 

முன்னாள் பிரதமர் நஜிப்புக்குத் தொடர்புடைய வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் அடங்கிய பட்டியல் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்று பெடரல் வாணிகக் குற்றங்கள் இயக்குனர் அமர் சிங் வலியுறுத்திக் கூறினார்.

ஜாலான் டூத்தாவிலுள்ள அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் அனைத்துக்குமான பட்டியல் நஜிப்பிடம் கொடுக்கப்பட்டது. சோதணை நடத்தப்பட்ட போது அவரும் அங்கிருந்தார் என்று அமர் மலேசியாகினியிடம் கூறினார்.

இதர நான்கு வீடுகள் சோதணை செய்யப்பட்டு அவற்றில் குடியிருந்தவர்களிடம் அல்லது தொழிலாளர்களிடம் முழு பட்டியலையும் போலீஸ் கொடுத்தது என்றாரவர்.

சோதணை செய்யப்பட்ட வீடுகளில் குடியிருந்தவர்களிடம் பட்டியலைக் கொடுத்தோம். தொழிலாளர்கள் இருந்த வீடுகளில் பட்டியலைத் தொழிலாளர்களிடம் கொடுத்தோம் என்று அமர் சிங், அவருக்கு (நஜிப்புக்கு) வேறு என்ன வேண்டும் என்று வினவினார்.

நேற்று, மலேசியாகினியுடனான சிறப்பு நேர்காணலில் தமக்கு முழுப் பட்டியலும் கொடுக்கப்படவில்லை என்று நஜிப் கூறியிருந்ததற்கு பதில் அளித்த அமர் இவ்வாறு கூறினார்.