அமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தை தலீபான்கள் விருப்பம்..

ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டும் என்றால் எங்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தலீபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் ராணுவ தலைமையகம் பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் 2001-ம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினர் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தி 3 ஆயிரம் பேரை கொன்று குவித்தனர்.

உடனே தலீபான்களுக்கு புகலிடம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து, தலீபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் மூண்டது. தொடர்ந்து 18-வது ஆண்டாக அது நீடிக்கிறது.

சமீபத்தில் கஜினி நகரை பிடிப்பதற்காக தலீபான்கள் கடுமையாக சண்டையிட்டனர். இந்த சண்டையில் ஆப்கானிஸ்தான் படையினர் 100 பேரும், அப்பாவி பொதுமக்கள் 35 பேரும் பலியாகினர்.

இந்த நிலையில் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி தலீபான்கள் தலைவர் மவுலவி ஹைபதுல்லா அகுன்ஜதா வெளியிட்டு உள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இருக்கிற வரையில் அமைதிக்கு வழி இல்லை. அமைதி திரும்ப வேண்டும் என்றால் எங்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என கூறி உள்ளார்.

-athirvu.in