புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் தங்கம் வேட்டை; பொலிஸார் பதுங்கித் தாக்குதல்!

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தம் முடிவடைந்ததிலிருந்து புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் உள்ள லோரன்ஸ் ராஜா என்பவரது காணியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக தெரிவித்து வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் இணைந்து அகழ்வில் ஈடுபடுவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது

இதனடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.டி சரத் சந்திரபாலவின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் அல்விஸ் பொலிஸ் அதிகாரிகளான கமகே(48759), சம்பத்(19136) விஜயகாந்த்(7230), முத்துனாஜக்க(60600) உள்ளிட்ட அணியினர் குறித்த வீட்டின் பின்புறமாக உள்ள காட்டில் இருந்து கடந்த 7 நாட்களாக இவர்களது நடவடிக்கைகளை அவதானித்து இன்று குறித்த இடத்தை தோண்டும் நடவடிக்கை இடம்பெறும் போது பொலிசாரால் அதிரடியாக 7 பேரும் கைது செய்யப்பட்டனர்

கைது செய்யப்பட்டவர்களை விசாரணைக்குட்படுத்திய போது விடுதலைப்புலிகள் புதைத்த நகைகள் ஒரு பெட்டியில் இந்த இடத்தில் இருப்பதாக தெரிவித்தே அகழ்வில் ஈடுபட்டதாக குறித்த நபர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நபர்கள் மாத்தறை, சிலாபம், மன்னார் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனவும் சிங்கள தமிழ் முஸ்லிம் ஆகிய மூன்று இனத்தவர்களும் உள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்ப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

-athirvu.in

TAGS: