பூனையை கொன்ற இருவருக்குக் காவல் நீட்டிப்பு, மூன்றாமவர் தேடப்படுகிறார்

சலவை இயந்திரத்தில் பூனையைச் சாகடித்ததாக நம்பப்படும் இருவருக்கான காவல் மேலும் மூன்று நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்காக அவர்களை மேலும் மூன்று நாள்களுக்குத் தடுத்து வைக்கும் ஆணையை செலாயாங் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் வழங்கியதாக கோம்பாக் போலீஸ் தலைவர் சம்சோர் மாரோவ் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை பூனையைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் மூவரின் நிழற்படங்களை போலீசார் வெளியிட்டனர்.

மூவரில் இருவர் கடந்த வெள்ளிக்கிழமை கோம்பாக்கில் கைது செய்யப்பட்டனர். மூன்றாவது நபரை போலீஸ் தேடி வருகிறது.

கோம்பாக்கில் உள்ள சுயமாக சலவை செய்துகொள்ளும் நிலையத்தில் கர்ப்பமான பூனை ஒன்றை அந்நபர்கள் துணிகளை உலர்த்தும் இயந்திரம் ஒன்றில் போட்டுச் சாகடிக்கும் கொடூரச் செயல் சிசிடிவி கேமராக்களில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

வலைத்தளங்களில் கடும் கண்டனத்துக்கு இலக்கான அச்செயல் குறித்து மலேசிய விலங்குநலச் சங்கம் போலீசில் புகார் செய்தது.

-பெர்னாமா