பசியால் வாடிய சிங்கள இராணுவம் ! உணவு அனுப்பிய விடுதலை புலிகள் ! உலக போரியல் வரலாற்றில் இது ஒரு சுவாரஸ்ய சம்பவம்

உலக போரியல் வரலாற்றில் இது ஒரு சுவாரஸ்ய சம்பவம்.

படத்தில் நடுவில் நிற்பவர் விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான தாக்குதல் தளபதி கேணல் கிட்டு. அவரது இடதுபுறம் நிற்பவர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் தளபதி கப்டன் கொத்தலாவல. யாழ்ப்பாணம் கோட்டைஇல் நிலைகொண்டிருந்த இராணுவத்திற்கு தலைமைதாங்கியவர்.

கோட்டை கிட்டு தலைமையில் முற்றுகையிடப்பட்டது. கொத்தலாவல தலைமையிலான பல நூற்றுக்கணக்கான சிங்கள இராணுவத்தினர் கோட்டைக்குள் முடக்கப்பட்டனர். அவர்களுக்கான உணவு, தண்ணீர் என்பன தடைப்பட்டது. விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு பயந்து ஹெலிகாப்டர்கள் கோட்டையில் தரையிறங்குவதில்லை. கோட்டைக்குள்ளிருந்த இராணுவத்தினர் பசியில் வாடினர்.

கப்பன் கொத்தலாவலவிடமிருந்து கேணல் கிட்டுவுக்கு வாக்கிடோக்கி மூலம் அழைப்பு வருகிறது. கொத்தலாவலயின் குரல் தழுதழுக்கிறது. “சாப்பாடு இல்லாமல் துடிக்கிறோம். தண்ணீரும் இல்லை. சமைப்பதற்கு விறகும் இல்லை. எங்களுக்கு சாப்பாடு தருவதற்கு எங்கள் ஹெலிகாப்டர்களை அனுமதிப்பீர்களா?”என்று கேட்கிறார்.

கிட்டுவுக்கு நெஞ்சு கனத்தது. எதிரி என்றாலும் அவன் பஞ்சத்தில் வாடுவதை விரும்பாத தமிழன் அல்லவா. “உங்கள் ஹெலிகாப்டர்களுக்கு இங்கே அனுமதி இல்லை. வேண்டுமானால் நாங்கள் உங்களுக்கு சாப்பாடு தருகிறோம். ஒரு லாரியில் உணவுப் பொருட்களும் விறகும் அனுப்புகிறேன். உங்கள் உறுப்பினர்களை தாக்கவேண்டாம் என்று சொல்லுங்கள்” என்றார் கிட்டு. கொத்தலாவல சம்மதித்தார்.

சற்று நேரத்தின்பின் கிட்டு அனுப்பிய லாரி கோட்டைக்குள் சென்று உணவுகளை கொடுத்துவிட்டு வருகிறது. கப்டன் கொத்தலாவல நெகிழ்ச்சியோடு கிட்டுவுக்கு நன்றி கூறுகிறார். அதன் பின்னரும் அதே இடத்தில் சண்டை ஆரம்பிக்கிறது. சண்டை நடந்துகொண்டிருக்கும்போதே கிட்டுவும் கொத்தலாவலவும் அடிக்கடி சண்டையை நிறுத்திவிட்டு நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். பல இடங்களிலும் சாவடைந்த இருதரப்பு சடலங்களும் இவர்களின் சந்திப்பினூடாக பரிமாறப்பட்டன.

பின் நாட்களில் கேணல் கிட்டு இந்திய-இலங்கை கூட்டு இராணுவச் சதியில் அகப்பட்டு இயக்கத்தின் மரபிற்கமைய பத்து சகாக்களோடு தற்கொலை செய்கிறார். கப்டன் கொத்தலாவல விடுதலைப் புலிகளின் போராட்ட நியாயத்தை உணர்ந்து ஸ்ரீலங்கா இராணுவத்திலிருந்து விலகி வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்கிறார்.

போர்க்களத்தில் எதிரிக்கே உணவளித்த பெருமை விடுதலைப் புலிகளையே சாரும்!

-eelamnews.co.uk

TAGS: