அல்டான்துயா கொலை: அதில் நஜிப்புக்கும் ரோஸ்மாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து தீபக்கிடம் விசாரணை

மங்கோலியரான அல்டான்துயா கொலையில் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் அவரின் துணைவியார் ரோஸ்மா மான்சூருக்கும் தொடர்புள்ளதாகக் கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் பூஸி ஹருன் கூறினார்.

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பூஸி, அவர்களுக்குத் தொடர்புள்ளதாக அண்மையில் அல்-ஜசிரா தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் குற்றஞ்சாட்டிய தொழில் அதிபர் தீபக் ஜெய்கிஷனிடம் வாக்குமூலம் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

“தீபக் உள்பட சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளோம். மற்றவர்களிடமும் பதிவு செய்யப்படும்.

“எப்போது என்று துல்லியமாகக் கூற முடியாது. சரியான நேரத்தில் அவரையும் சந்தித்து விசாரணை செய்வோம்.

“இவ்விவகாரத்துக்கு விரைவிலேயே தீர்வு காணப்படும்”, என்றாரவர்.

“அவர்” என்றால் யார் என்பதை ஐஜிபி விவரிக்காவிட்டாலும் நஜிப்பைத்தான் குறிப்பிடுகிறார் என்றே அனுமானிக்கப்படுகிறது.