‘ஏக்கிய இராட்சிய’ என்றால் ஒற்றையாட்சியா? எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களிடம் கேள்வி!

“ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சியா? நான் இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளதாவது, “மகாநாயக்கர்களைச் சந்தித்த ரணில் விக்ரமசிங்க ஒற்றையாட்சி தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்ததாக தமிழ் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்கவும் மகாநாயக்கர்களும் தமிழிலா உரையாடினார்கள். அவர்கள் சிங்களத்தில் தான் உரையாடினர். அன்போது ஏக்கிய இராட்சிய என்றே கூறியிருப்பார். ஒற்றையாட்சி என்று கூறியிருக்கமாட்டார்கள்.

ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி இல்லை. இதனை நான் 100 தடவைகளுக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனால் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன.

மகாநாயக்கர்களுடனான சந்திப்பின்போது பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார் என எழுதியுள்ளார்கள். ஆம் நாம் உத்தேச அரசியல் யாப்பின்போதே அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில் எமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அனைத்து மதங்களும் மதிக்கப்பட்டு அவை சம அந்தஸ்தில் நோக்கப்படவேண்டும்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: