தமிழர்கள் தொடர்பில் முக்கிய கருத்த வெளியிட்ட சீனா!

இலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம்.

இந்நிலையில் இலங்கையில் இடம்பெறும் சீன அபிவிருத்தி மற்றும் தொழிற்திட்டங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழியை திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கம் கிஞ்சித்தும் எமக்கு கிடையாது.

இனிமேல் சீன நிறுவனங்களின் பெயர்பலகைகள் இலங்கையில் அமைக்கப்படும் போது உங்கள் அமைச்சுடன் கலந்து பேசி அவற்றை அமைக்க எங்கள் வர்த்தக பிரிவு அதிகாரியை நான் நியமிக்கிறேன் என சீன தூதுவரின் அழைப்பை அவரது இல்லத்துக்கு இன்று விஜயம் செய்த தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனிடம், இலங்கையிக்கான சீன தூதுவர் செங் யுவான் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் அமைச்சர் மனோ கணேசனுடன் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சந்திரசேகரம், பணிப்பாளர் மதிவதனன் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கையில் உள்ள சீன தொழில் முயற்சி திட்ட வளாகங்களில், இலங்கையின் மொழிக்கொள்கை பின்பற்றப்படுவதில்லை.

விசேடமாக தமிழ் மொழி புறக்கணிப்புக்கு உள்ளாகிறது என்ற புகார் சமீப காலங்களில் மேலெழுந்துள்ளது.

இவைபற்றி சீன தூதுவரை சந்தித்து நேரடியாக கலந்துரையாட விரும்புவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சு, கொழும்பில் உள்ள சீன தூதரகத்துக்கு அறிவித்தது.

அதையடுத்து, அமைச்சர் மனோ கணேசனை தனது அதிகாரபூர்வ இல்லத்துக்கு வருகை தரும்படி சீன தூதுவர் செங் யுவான் விடுத்த அழைப்பை அமைச்சர் மனோ கணேசன் ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச்சந்திப்பின் போது சீன தூதுவர், அமைச்சர் மனோ கணேசனிடம் கூறியதாவது,

இலங்கை மக்களுடமான சீன நாட்டின் உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம்.

இந்நிலையில் இலங்கையில் இடம்பெறும் சீன அபிவிருத்தி மற்றும் தொழிற்திட்டங்களின் பெயர் பலகைகளில் உலகின் தொன்மையான ஒரு மொழியான தமிழ் மொழியை திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கம் கிஞ்சித்தும் எமக்கு கிடையாது.

இதுவரை அமைக்கப்பட்டுள்ள தொழிற்திட்டங்களின் பெயர் பலகைகளில் இருக்கின்ற எழுத்து பிழைகள் அல்லது மொழி புறக்கணிப்பு போன்றவை படிபடியாக திருத்தப்படும். அவற்றுக்கு மொழிபெயர்ப்பு போன்ற விடயங்களுக்கு நாம் உங்களை நாடுகிறோம்.

இனிமேல் சீன நிறுவனங்களின் பெயர்பலகைகள் அமைக்கப்படும் போது உங்கள் அமைச்சுடன் கலந்து பேசி அவற்றை அமைக்க எங்கள் வர்த்தக பிரிவு அதிகாரியை நான் நியமிக்கிறேன் என்று கூறினார்.

அவர் மேலும், நீங்கள் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் ஒரு சிரேஷ்ட தலைவர் என்பதும், இந்நாட்டின் வாழும் இனங்களுக்கு இடையிலான தேசிய சகவாழ்வுக்கு நீங்கள் பாரிய பங்களிப்பை வழங்கி வருவதையும் நாம் அறிவோம்.

உண்மையில் எங்கள் தூதரக பணியாளர் மற்றும் இங்கு வரும் சீன பிரஜைகள் இனிமையான தமிழ் மொழியை கற்க ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு உதவிட நான் உங்களை கோருகிறேன்.

இலங்கையின் இனங்களுக்கு இடையிலான தேசிய சகவாழ்வுக்கு எம்மால் அளிக்கக்கூடிய உதவிகளை நீங்கள் கோரினால் வழங்க நாம் தயார், என்று கூறினார்.

தூதுவருக்கு பதிலளித்த அமைச்சர் மனோ கணேசன், சீனத்தை போன்று தமிழும் உலகின் தொன்மைவாய்ந்த மொழிகளில் ஒன்று என்பது உங்களுக்கு தெரியும்.

சீன தொழிற்திட்டங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு தமிழ் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சிங்களம், தமிழ் ஆகியவை தேசிய அரசகரும மொழிகள். ஆங்கிலம் இணைப்பு மொழியாகும். எனது அமைச்சின் அரச கரும மொழிகள் திணைக்களத்தில் எமது தேசிய மொழிகளுடன் ஆங்கிலம், ஹிந்தி, சீன, ஜேர்ம,ன், கொரிய, பிரெஞ்ச், ஜப்பானிய மொழிகளும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் வெளிநாட்டு மொழிகளை மதிக்கும் எமக்கு, எமது மொழி மதிக்கப்படாமை வேதனையை தருவதை நீங்கள் புரிந்துக்கொண்டதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இதுவிடயமாக உங்கள் அதிகாரியுடன் கூட்டாக செயற்பட அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மதிவதனை நான் உடனடியாக நியமிக்கிறேன்.

உங்கள் தூதரக பணியாளர்களுக்கும், சீன தொழிலாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இலங்கை மொழிகளை கற்றுக்கொள்ள அவசியமானால், அவரை தொடர்பு கொள்ளுங்கள். அவற்றுக்கு நாம் ஆவன செய்வோம் என்று கூறினார்.

இதன்போது அமைச்சரால், இலங்கையின் மொழிச்சட்ட விபரக்கோவை, சீன தூதுவருக்கு வழங்கப்பட்டது. சீன தூதரகத்தால் அமைச்சருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

-athirvu.in

TAGS: