அமெரிக்கா செல்லும் ஈழத்தமிழர்களின் உடலின் எச்சங்கள்!

மன்னார் ‘சதொச’ வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் இருந்து தெரிவு செய்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்காக எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல இருப்பதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

குறித்த மனித எச்சங்களின் மாதிரிகளுடன் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ அவர்களும் அமெரிக்கா செல்லவுள்ளார்.

மேலும் அமெரிக்காவிற்கு ஆய்விற்காக எடுத்துச் செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதி நிதி ஒருவரை இணைத்துக்கொள்ள மன்னார் நீதிமன்றம் நேற்று (18) வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்றத்தினூடாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

மன்னார் நகர் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகளை அமெரிக்காவிலுள்ள புளோரிடாவிற்கு ‘கார்பன்’ பரிசோதனைக்காக எடுத்துச் செல்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 24 ஆம் திகதி அதிகாலை குறித்த குழு அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளனர்.மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது நேற்று வெள்ளிக்கிழமை 132 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

இது வரை குறித்த அகழ்வு பணிகளின் போது 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 294 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.அவற்றில் 23 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: