தமிழ்ப்பள்ளிக்கான பணத்தையும் நிலத்தையும் மீட்க விவேகானந்த ஆசிரமத்தின் மீது சட்ட நடவடிக்கை!      

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு பெட்டாலிங்ஜெய விவேகானந்த தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்காக மத்திய அரசாங்கம் வழங்கியதாக கருதப்படும் ரிம 60 இலட்சத்தின் ஒரு பகுதியையும், தற்போது அந்தப்பள்ளி அமைந்துள்ள நிலத்தையும், பள்ளி வாரியத்திடம் ஒப்படைக்க கோரி அந்தப் பள்ளியின் வாரியத்தினர் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இது சார்பாக நேற்று (25.1.2019) பெட்டாலிங் ஜெயாவில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் டாக்டர் செ. செல்வம், அதன்  துணைத்தலைவர் இரா. ஜெகா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நா. இராஜரத்தினம் அதன் துணைத்தலைவர் க. சுப்பிரமணியம்,  வழக்கறிஞர் தினகரன் மற்றும் பள்ளி மேலாளர் வாரிய செயலவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஷா ஆலாம் உயர்நீதி மன்றத்தில் இம்மாதம் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் பிரதிவாதியாக  விவேகானந்த ஆசிரமம், அவர்களுக்கு உடந்தையாக இருந்த பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூன்று உறுப்பிணர்கள் மற்றும் நில உரிமத்தை பெயர் மாற்றம் செய்த நில உரிம பதிவு அதிகாரி ஆகியோர் அடங்குவர் என்று வாரியத் தலைவர் டாக்டர் செ. செல்வம் தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்தப்பள்ளியின் வாரியம் 2016-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது என்றும்,  இப்பள்ளியின் நில உரிமம் பள்ளியின் பெயரிலேயே 50 ஆண்டுகள் (1959-2009) இருந்துள்ளதாக தெரிகிறது.

ஆனால், அந்த உரிமம் கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்தின் பெயரில் ஒரே ஒரு ரிங்கிட்டுக்கு, 16.08.2012-இல் பெயர் மாற்றப்பட்டது. இதற்கு உடந்தையாக  மூன்று முன்னால் பெற்றோர் ஆசிரியர் சங்க செயலவை உறுப்பினர்கள் (தலைவர் உட்பட ) கையொப்பமிடப்பட்ள்ளதாக தெரிகிறது.

அதோடு,  விவேகானந்தா பள்ளிக்கு கல்வி அமைச்சு 2012 வாக்கில் வழங்கிய  ரிம 60 இலட்சம் பணத்தில் எதையும்  விவேகானந்தா ஆசிரமம்  இது வரையில் இந்தப் பள்ளியின் மேம்பாட்டுக்காக பயன்படுத்த வில்லை.

பள்ளியில் ஒரு நான்கு மாடி கட்ட மேம்பாட்டுக்காக  இந்த பண ஒதுக்கீடு இருந்தும் இதுவரையில் எந்தவொரு கட்டிட மேம்பாடு வேலைகளும் விவேகானந்தா ஆசிரமம் மேற்கொள்ளவில்லை.

நிலத்தையும் எடுத்துக்கொண்டு பணத்தையும் எடுத்துக்கொண்டு எதையும் பள்ளிக்கு செய்யாமல் விவேகானந்த ஆசிரமம் இருப்பது ஒரு பயனற்ற செயலாக இருப்பதாகவும், நில உரிமை அற்றநிலையில் பள்ளி வாரியம் எந்த ஒரு மேம்பாட்டையையும் பள்ளியின் நலன் கருதி செய்ய இயலாது என்பதும் பள்ளி வாரியத்தின் வாதமாகும்.

இந்தப்பள்ளியை துரிதமாக மேம்படுத்த நாங்கள் ஆர்வம் கொண்டுள்ளோம், நில உரிமம் இல்லாமல் எதையும் செய்ய இயலாது. எனவேதான் இந்த வழக்கு தொடுக்கும் சூழலுக்கு வந்தோம் என்கிறார் இந்தப்பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவரும் தற்போதைய வாரியத்துணை தலைவருமான இரா. ஜெகா. இந்தப்பள்ளியின் மேம்பாட்டுக்கு  பாலர்பள்ளி உட்பட பல வசதிகளை உருவாக்கியவர் இவராகும்.