டிரம்ப் – கிம் உச்சி மாநாடு: வியட்நாம் வந்தடைந்தார் கிம் ஜாங்-உன்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வட கொரியாலிருந்து, சீனா வழியாக ரயிலில் சென்ற அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங்-உன் வியட்நாமை வந்தடைந்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக கிம் கூடுமான அளவு தொடர்வண்டியிலேயே பயணிக்கிறார். தென் கொரியா, சீனா செல்லும் போதும் தொடர் வண்டியிலேயே சென்றார்.

பச்சை மற்றும் மஞ்சள் வண்ணத்திலிருக்கும் கிம் ஜாங்-உன்னின் தொடர் வண்டி, சீனாவின் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள டாங் டாங் இரயில் நிலையத்தை வந்தடைந்தது. பிறகு, அங்கிருந்து கார் மூலம் ஹனோய் நகரை நோக்கி கிம் புறப்பட்டார்.

இருநாட்டு தலைவர்களுக்கிடையான முதல்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற நிலையில், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக தற்போது இரண்டாவது கட்ட சந்திப்பு வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெற உள்ளது.

தெற்கு வியட்நாமில், தனாங் நகரத்தில் 1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க துருப்புகள் வந்து இறங்கியது, தென்கிழக்கு ஆசியாவில் முதலாளித்துவ சித்தாந்தங்களுக்கும் கம்யூனிசத்திற்கும் எதிரான வன்முறை போருக்கு வித்திட்டது.

டிரம்ப் - கிம் உச்சி மாநாடு

கிட்டத்தட்ட 44 ஆண்டுகளுக்கு பிறகு, வியட்நாமின் முன்னாள் எதிரி நாடான அமெரிக்காவும், வியட்நாமின் பனிப்போர் காலக் கூட்டாளியான வடகொரியாவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

பிப்ரவரி 27 மற்றும் 28ல் வியட்நாமில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பது உறுதியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று (செவ்வாய்க்கிழமை) வியட்நாம் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதத்தில்தான் முதல்முறையாக பதவியில் இருக்கும் ஒரு அமெரிக்க அதிபரும், வட கொரிய அதிபரும் சிங்கப்பூரில் சந்தித்தனர்.

இருப்பினும், சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

ஏன் வியட்நாம்?

வியட்நாம்?

முதலாளித்துவ பொருளாதாரத்தோடு, கம்யூனிச ஆட்சி நடக்கும் வியட்நாம், அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் நட்பு நாடாக விளங்குகிறது.

அமெரிக்கா மற்றும் வடகொரியா இரு நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நடுநிலை நாடாக வியட்நாம் கருதப்படுவதாக கூறுகிறார் வல்லுநர் கார்ல் தாயெர்.

“டிம்ப் – கிம் உச்சி மாநாட்டிற்கு வியட்நாமை தேர்ந்தெடுத்திருப்பதற்கு இன்னும் ஒரு முக்கிய காரணம், வியட்நாமால் உச்சிமாநாட்டிற்கு தேவையான உயர் பாதுகாப்பு சூழலை வழங்க முடியும். எனவே வியட்நாமால் இந்த மாநாட்டை சிறப்பாக தொகுத்து வழங்க முடியும் என்று அனைத்து தரப்பினரும் நம்புகின்றனர்,” என்றும் கார்ல் தாயெர் தெரிவித்தார். -BBC_Tamil