மண்டைதீவில் கடற்படைக்கு காணி ஆக்கிரமிப்பு – அளவீடு செய்யும் முயற்சி தோல்வி

மண்டைதீவில் சிறிலங்கா கடற்படையினருக்கு 18 ஏக்கர் காணிகளைச் சுவீகரிப்பதற்காக, நில அளவீடு செய்யும் முயற்சி, பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

மண்டைதீவு கிழக்குப் பகுதியில் 11 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கர் பளப்பளவு கொண்ட தனியார் காணியை ஆக்கிரமித்து சிறிலங்கா கடற்படையினர் நிலைகொண்டுள்ளனர்.

இந்தக் கடற்படைத் தளத்துக்காக, 18 ஏக்கர் காணிகளையும் சுவீகரிப்பதற்கு முடிவு செய்துள்ள சிறிலங்கா அரசாங்கம், அதற்காக அளவீட்டுப் பணிகளை நேற்றுக்காலை மேற்கொள்ளவிருந்தது.

இதுதொடர்பாக காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்றுக்காலை காணி உரிமையாளர்கள், அந்தப் பகுதி மக்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், நில அளவீட்டுப் பணிக்காக வந்திருந்த அதிகாரிகள் தமது பணியை மேற்கொள்ள முடியாமல் திரும்பிச் சென்றனர்.

-puthinappalakai.net

TAGS: