ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு – 37 போராளிகள் கொல்லப்பட்டனர்!

ஆப்கானிஸ்தான் நாட்டின் குன்டுஸ் நகரை கைப்பற்றும் முயற்சியை முறியடித்த ராணுவத்தினர், மற்றொரு பகுதியில் 27 போராளிகளை சுட்டுக் கொன்றனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை குன்டுஸ் நகரின் வடக்கு பகுதியை சுற்றி வளைத்து தலிபான்கள் கைப்பற்ற முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு கூடுதலாக ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சோதனை சாவடிகளின் அருகே இருதரப்பினருக்கும் இடையில் இன்று பிற்பகல் வரை நீடித்த துப்பாக்கிச் சண்டையில் தலிபான்கள் பின்வாங்கி சென்றதால் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக குன்டுஸ் மாகாண காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மோதலில் பத்துக்கும் அதிகமான தலிபான்கள் மற்றும் பொதுமக்களில் இருவர் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டர்.

இதேபோல், நாட்டின் கிழக்கு பகுதியில் நன்கார்ஹர் மாகாணத்திற்குட்பட்ட ஷிர்ஸாத் மாவட்டத்தில் ராணுவத்தினர் மீது கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்த வந்த தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையில் நேற்று பின்னிரவு நடந்த மோதல்களில் 27 தலிபான்கள் கொல்லப்பட்டதாக நன்கார்ஹர் மாகாண கவர்னர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

-athirvu.in