இலங்கை தாக்குதல்: தற்கொலை குண்டுதாரிகளின் தகவல்கள் வெளியீடு

இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் 9 தற்கொலை குண்டுதாரிகள் தொடர்பான தகவல்களை போலீஸார் இன்று புதன்கிழமை வெளியிட்டனர்.

இந்த 9 பேர் தங்கியிருந்த இடங்கள் மற்றும் அவர்களின் சொத்து விவரங்கள் விசாரணை நடத்தும் போலீஸாரால் கண்டறிப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த சொத்துக்களை எதிர்வரும் காலங்களில் அரசுடமையாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு – கொச்சிக்கடை – புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீதே முதலாவது தாக்குதல் நடாத்தப்பட்டது.

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் வசித்த அலாவூதீன் அஹமட் மூவாத் என்ற நபரால், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, கொழும்பு ஷங்கிரிலா நட்சத்திர விடுதியின் மீது இரண்டு தற்கொலை குண்டுதாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.

இலங்கை போலீஸார் வெளியிட்டு்ளள தற்கொலை குண்டுதாரிகளின் புகைப்படங்கள்
Image captionஇலங்கை போலீஸார் வெளியிட்டுள்ள தற்கொலை குண்டுதாரிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட இடங்கள்.

மேலே உள்ள படத்தில் உள்ளவர்களின் பெயர்கள் வரிசைப்படி:

  1. ஷங்கிரிலா நட்சத்திர விடுதி – மொஹமத் ஹாஷிம் மொஹமட் சஹரான்

  2. ஷங்கிரிலா நட்சத்திர விடுதி – மொஹமத் இப்ராஹிம் இல்ஹாம் அஹமத்

  3. சினமன் கிரான்ட் நட்சத்திர விடுதி – மொஹமத் இப்ராஹிம் இன்ஷாப் அஹமத்

  4. கிங்ஸ்பேரி நட்சத்திர விடுதி – மொஹமத் அசாம் மொஹமத் முபாரக்

  5. கடுவாபிட்டிய தேவாலயம் – ஆஜ் மொஹமத் முகமது ஹஸ்துன்

  6. கொச்சிக்கடை – புனித அந்தோனியார் தேவாலயம் – அலாவூதீன் அஹமத் மூவாத்

    தற்கொலை குண்டுதாரிகள்

    பெயர்கள் வரிசைப்படி:

  7. மட்டக்களப்பு – சியோன் தேவாலயம் – மொஹமத் நாஷர் மொஹமத் அசாத்

  8. தெஹிவளை தாக்குதல் – அப்துல் லதீப் ஜமீல் மொஹமத்

  9. தெமட்டகொடை தாக்குதல் – பாதீமா இல்ஹாம்

    அழுகின்ற பெண்மணி

    காத்தான்குடி மற்றும் தெமட்டகொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மொஹமத் ஹாஷிம் மொஹமத் சஹரான் மற்றும் மொஹமத் இப்ராஹிம் இல்ஹாம் அஹமத் ஆகியோரே ஷங்கிரிலா நட்சத்திர விடுதியின் மீது தாக்குதல் நடத்தியது விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, கொழும்பு – சினமன் கிரேன்ட் நட்சத்திர விடுதியின் மீதும் கடந்த 21ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலை தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த மொஹமத் இப்ராஹிம் இன்ஷாப் அஹமத் என்ற நபரே நடத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஷங்கிரிலா நட்சத்திர விடுதியின் மீது தாக்குதல் நடத்திய மொஹமத் இப்ராஹிம் இல்ஹாம் அஹமத் மற்றும் சினமன் கிரேன்ட் நட்சத்திர விடுதியின் மீது தாக்குதல் நடத்திய மொஹமத் இப்ராஹிம் இன்ஷாப் அஹமத் ஆகியோர் சகோதரர்கள் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை
இலங்கை

கொழும்பு – 12 பகுதியில் வசித்த மொஹமத் அசாம் மொஹமத் முபாரக் என்ற நபரே கிங்ஸ்பெரி நட்சத்திர விடுதியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர், கம்பளை பகுதியைச் சேர்;ந்த அப்துல் லதீப் ஜமீல் மொஹமட் என போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

தெமட்டகொடை – மஹவில பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்தது பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தாக்குதலில் சேதமடைந்த தேவாலயம்

இதன்படி, பாதீமா இல்ஹாம் என்ற பெண்ணே இந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளமையும் விசாரணைகளில் கண்டறிப்பட்டுள்ளது.

ஷங்கிரிலா நட்சத்திர விடுதியின் மீது தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும் மொஹமத் இப்ராஹிம் இல்ஹாம் அஹமத்தின் மனைவியே, பாதீமா இல்ஹாம் என போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

நீர்கொழும்பு – கடுவாபிட்டிய தேவாலயத்தின் மீது ஆஜ் மொஹமத் முகமது ஹஸ்துன்னீனால் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை
இலங்கை

மட்டக்களப்பு – சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய நபரும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த மொஹமத் நாஷர் மொஹமத் அசாத் என்ற நபரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். -BBC_Tamil

TAGS: