ஜோகூர் பட்டத்திளவரசர் சிறு பிள்ளை, பேசுவதை நிறுத்த வேண்டும்- மகாதிர்

ஜோகூர் பட்டத்திளவரசர்(டிஎம்ஜே) துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் அவருக்குத் தெரியாத விசயங்கள் குறித்துப் பேசக் கூடாது என டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.

பிரதமர், ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் குறித்துக் கருத்துரைப்பதைத் தவிர்த்தார் ஆனால், பட்டத்திளவரசர் பற்றிக் கருத்துரைப்பதில் அவருக்கு எந்தத் தயக்கமுமில்லை.

“சுல்தான் குறித்து நான் எதுவும் சொல்வது நன்றாக இராது. ஏனென்றால் அவர் சுல்தான்.

“ஆனால், டிஎம்ஜே சிறு பிள்ளை. என்ன நடக்கிறது என்பது அவருக்குத் தெரியவில்லை.

“எதுவும் தெரியவில்லை என்றால் பேசக் கூடாது”, என மகாதிர் இன்று புத்ரா ஜெயாவில் ஒரு நேர்காணலில் கூறினார்.

துங்கு இஸ்மாயில் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் நிலங்களை அள்ளிக் கொடுத்த தம் தந்தையாரின் நற்செயல்கள் பெரிதாகப் பேசப்படவில்லை என்று கூறியிருப்பது குறித்துக் கருத்துரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு மகாதிர் அவ்வாறு கூறினார்.