இலங்கை குண்டுவெடிப்பு: சஹ்ரான் ஹாசிமின் மரணத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று இலங்கை அரசால் கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் என்பவரின் மரணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, அவரின் மகள் மொஹமத் சஹ்ரான் ருஸைனாவின் ரத்தத்தைப் பெற்று டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்வதற்கு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சாய்ந்தமருதிலுள்ள வீடொன்றில் கடந்த 26ம் தேதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில், சஹ்ரானின் உறவினர்கள் உள்ளடங்கலாக பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த பலர் இறந்த நிலையில், அங்கிருந்து சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோரை படையினர் காப்பாற்றி சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதேவேளை, சஹ்ரானின் சகோதரி மதனியா என்பவரை, டிஎன்ஏ பரிசோதனைக்காக கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துமாறு, மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகருக்கு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சஹ்ரானின் தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் அண்மையில் நடந்த சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுவெடிப்பில் இறந்து விட்டார்கள் என நம்பப்படுகிறது.

சஹ்ரானின் சொந்த ஊரான காத்தான்குடியில் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த சஹ்ரானின் சகோதரி மதனியா, அண்மையில் பிபிசிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் கடந்த இரண்டு வருட காலமாக சஹ்ரானுடன் தனக்கு தொடர்புகள் எவையும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

சஹ்ரானின் மகள்

இந்த நிலையில், மே ஒன்றாம் தேதியன்று, சஹ்ரானின் சகோதரியான 25 வயதாகும் மதனியாவை அவரின் காத்தான்குடி வீட்டில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இதன்போது அவரின் வீட்டில் 20 லட்சம் ரூபாய் பணத்தையும் போலீஸார் கைப்பற்றியிருந்தனர்.

குறித்த பணத்தை மதனியாவுக்கு சஹ்ரான் வழங்கியிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக போலீஸ் செய்தித்தொடர்பாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சஹ்ரானின் சகோதரி மதனியாவை, டிஎன்ஏ பரிசோனைக்காக தற்போது கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளதாக, மட்டக்களப்பு சிறைச்சாலைத் தரப்பு பிபிசிக்கு தெரிவித்தது.

ஏப்ரல் 21ம் தேதியன்று கொழும்பில் அமைந்துள்ள ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் தேசிய தௌஹீத் ஜாமஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான், தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதாக இலங்கை பாதுகாப்புத் தரப்பு கூறுகிறது.

எனவே, சஹ்ரானுடையவை என நம்பப்படும் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள உடற்பகுதிகளையும், உயிருடன் உள்ள சஹ்ரானின் மகள் மொஹமத் சஹ்ரான் ருஸைனா மற்றும் சகோதரியின் இரத்த மாதிரிகளையும் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம், ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை நடத்திப் பலியானவர் சஹ்ரான்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு பாதுகாப்புத் தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

தனது மகளுடன் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியா போலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதன்போது முக்கிய தகவல்களை அவர் வெளியிட்டுள்ளதாகவும் உள்ளுர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இலங்கை

மக்கள் அச்சமின்றி நடமாடலாம் – பாதுகாப்பு செயலாளர் நம்பிக்கை

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட

இந்நிலையில், இலங்கை பாதுகாப்பு பிரிவின் மீது முழுமையான நம்பிக்கையை வைத்து, தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு சிறப்பு உரை நிகழ்த்திபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, நாட்டு மக்களிடையே அச்ச நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினர் மற்றும் போலீஸார் 24 மணிநேரமும் செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், பாதுகாப்பு பிரிவின் மீது முழுமையான நம்பிக்கையை வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் ஏற்பட்டிருந்த பாதுகாப்பற்ற நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதை தான் பொறுப்புடன் கூறிக் கொள்வதாகவும் பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பெருந்தொகையான வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இலங்கையில் நிலைக்கொண்டிருந்த 30 வருட கால யுத்தத்தை நிறைவு செய்த முப்படை மற்றும் போலீஸார் மீது முழுமையான நம்பிக்கையை வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பயங்கரவாதிகளை அடியுடன் அழிக்கும் வரை பாதுகாப்பு பிரிவினர் முழு மூச்சுடன் செயற்படுவார்கள் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். -BBC_Tamil

TAGS: