அனல் காற்று அடிக்கும் ஆபத்து: “பெண்களின் கருவுறும் திறன் பாதிக்கப்படலாம்” – எப்போது உணரப் போகிறோம் நாம் ?

வெயில் காலம் சிலருக்கு மிக மோசமானதாக இருக்கிறது.

மத்திய மற்றும் தென் இந்தியா, அண்டை நாடான பாகிஸ்தான் ஆகிய இடங்களில் வெப்பநிலை 45 டிகிரியை தாண்டியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு என்ற நகரத்தில் வெயில், 50.8 டிகிரி செல்சியஸை தொட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அது மட்டுமல்லாது பல இடங்களில் கடுமையான அனல் காற்று வீசுகிறது. தெருவோரங்களில் கடை வைத்துள்ளவர்கள், டிராஃபிக் போலீஸார், கைரிக்ஷா ஓட்டுபவர்கள் என வெளியே வேலை செய்பவர்களுக்கு இதனை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

குறைந்தளவே உணவு மற்றும் தண்ணீரோடு சுட்டெரிக்கும் வெயிலில் பல கிராமப்புற இடங்களில் ஆண்களும் பெண்களும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

வீட்டினுள் இருப்பவர்களையும் இந்த வெயில் விட்டுவைக்கவில்லை. ஏசி போன்ற குளிர் சாதனங்களை வாங்க முடியாதவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

வெயிலால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த செய்திகளை நாம் காணமுடிகிறது. மனிதர்கள் மட்டுமல்ல வெப்பத்தால் மிருகங்களும் துன்பப்படுகின்றன.

வெயில்

உலகம் முழுவதுமே இவ்வாறு பல்வேறு இடங்களில் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. பொதுவாக மக்கள் அதிகம் தண்ணீர் குடிக்குமாறு, நேரடி வெப்பத்தை தவிர்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

ஆனால் உலகளவில் வெப்பம் உயர்ந்து வருவது அதிகரித்துள்ள நிலையில், அதற்கான போதிய நடவடிக்கைகளை நாம் எடுக்கிறோமா?

அமைதியாக கொள்ளும் வெப்பம்

2018ஆம் ஆண்டில், பல்வேறு நாடுகளில் கோடை காலத்தில் மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.

ஒரு சில இடங்களில் சராசரியை விட அதிக வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. பிரிட்டன், வட ஐரோப்பா நாடுகள் (குறிப்பாக நார்வே மற்றும் சுவீடன்), கிழக்கு கனடா, கிழக்கு சைபீரியாவின் சில பகுதிகள், ஜப்பான் மற்றும் கேஸ்பியன் கடலை சுற்றியுள்ள பிராந்தியங்களை நாம் குறிப்பாக சொல்லலாம்.

ஜப்பானில் வெயிலால் ஏற்படும் பக்கவாதத்தால் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் ‘வெப்பக் காற்றை’ இயற்கை பேரிடர் என்று அந்நாடு அறிவித்துள்ளது.

பல்வேறு பிற நாடுகளில், இந்த வெப்பம் மக்களை அமைதியாக கொன்று வருவதாக இருக்கிறது.

“சூறாவளி, பூகம்பம். வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரின் விளைவுகள் உடனடியானது. ஆனால், வெப்பம் அப்படி கிடையாது” என்று பருவநிலை குறித்து ஆய்வை மேற்கொண்டுவரும் ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சாரா பெர்கின்ஸ், ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

வெப்பம் அதிகமாக உள்ள ஏழ்மையான நாடுகளில் நிலைமை மேலும் மோசமாக உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

“பணக்கார நாடுகளில் மட்டும் வெயிலால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்காகோர் உயிரிழக்கின்றனர்” என்கிறார் சாரா.

வெயில்

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவும் கடந்த காலங்களில் வெப்பத்தின் மோசமான விளைவுகளை கண்டிருக்கின்றன.

“ஆனால் ஏழ்மையான நாடுகளில் உயிரிழப்புகள் பன்மடங்கு அதிகமாக இருக்கும்” என்று சாரா கூறுகிறார்.

அனல்காற்று என்பது சாதாரணமாக பார்க்கப்படும் இந்தியா போன்ற நாடுகளில் இதுதான் நடக்கிறது. இதனை சமாளிக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினாலும், அது போதாது என்று பலரும் கருதுகின்றனர்.

“தற்போதைய நிலைமை தொடர்ந்தால், தெற்காசியாவில் வீசும் அனல் காற்று, அடுத்த சில தசாப்தங்களில் மனித சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு அதன் வெப்பம் உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது” என்று அமெரிக்க ஆய்வாளர் குல்ரெஸ் ஷா அசர் தெரிவிக்கிறார்.

“தண்ணீர் பிரச்சனை, சீரான மின்விநியோகம் இல்லாதது போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் இந்தியா போன்ற நாடுகள், அந்தச் சூழலில் என்ன செய்யும்?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

2015ஆம் ஆண்டு இந்தியாவில் வெயிலால் 1,100 பேர் உயிரிழக்க, அனல் காற்றை இயற்கை பேரிடராக அறிவிக்க வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இந்திய அரசாங்கம் அதனை செய்யவில்லை.

பாதிக்கப்படும் மக்கள்

மற்ற நாடுகளிலும் கூட, அனல் காற்றை இயற்கை பேரிடராக அறிவிக்க பல தயக்கங்கள் இருக்கிறது. அனல் காற்றினால் கண்களுக்கு தெரியாத அளவு விளைவுகள் ஏற்படுகிறது.

சமுதாயத்தில் உள்ள ஒரு சிலரை மட்டுமே இது பாதிக்கிறது என்பது இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார் ஜிசுங்.

“உங்கள் வீட்டில், காரில், உங்கள் அலுவலகத்தில் ஏசி இருந்தால், அனல் காற்று எவ்வளவு ஆபத்தானது என்று அறிந்திருக்க வாய்ப்பில்லை”

கடுமையான வெப்பம் என்பது உடலளவில் மட்டும் பிரச்சனை ஏற்படுத்தாது. மாணவர்களின் கற்றுக் கொள்ளும் திறனில் தாக்கத்தை ஏற்படுத்தி, தேர்வில் சரியாக செயல்பட முடியாமல் போகலாம். மேலும் ஊழியர்களின் வேலையை பாதிக்கும். அது மட்டுமல்லாது பெண்களின் கருவுறும் திறனையும் இது பாதிக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

இதில் கடுமையாக பாதிக்கப்படுவது ஏழைகள்தான்.

வெயில்

“சமூகத்தின் விளிம்பில் இருக்கும் மக்கள்தான் இதில் உண்மையாக பாதிக்கப்படுவது. வயதானவர்கள், வீடற்றவர்கள், குளிர் சாதன வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் இருப்பவர்கள், ஆகியோர் இதில் அடங்குவார்கள்” என்கிறார் கர்லஸ் ஷா அசர்.

செப்டம்பர் 2017ல் போர்ட்டோ ரிகோவில் வீசிய மரியா சூறாவளியை உதாரணமாக கூறுகிறார் குல்ரஸ்.

இதில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அரசாங்கம் ஒப்புக் கொண்டது. இதற்கு முன்பு அரசு கூறியதைட இது 20 மடங்கு அதிகமானது.

பாக்டீரியா நோய்கள், சுகாதார வசதிகளை அணுக முடியாதவர்கள், தற்கொலை போன்றவை இதற்கு காரணம்.

“ஆனால், வெப்பக் காற்றால் நேரடியாக உயிரிழந்தவர்கள் மட்டுமே கணக்கிடப்படுகிறார்கள். வயதான ஒருவர் அனல் காற்றால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தால், அவர் இறப்புக்கு மாரடைப்பு மட்டுமே காரணமாக கூறப்படுகிறது” என குல்ரஸ் கூறுகிறார்.

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாறுவது

ஏசி பயன்படுத்துவது அனல் காற்றின் ஆபத்தை குறைக்கும்.

சிங்கப்பூரின் பொருளாதார மேம்பாட்டுக்கு ஒரு முக்கிய காரணம் குளிர்சாதன இயந்திரங்கள் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் லீ க்வான் யூ ஒருமுறை கூறியிருந்தார்.

“மனிதன் கண்டுபிடித்த ஒரு முக்கிய கண்டுபிடிப்பு குளிர்சாதன இயந்திரங்கள். அது இல்லாமல் வெப்ப மண்டல பகுதிகளில் முன்னேற்றம் என்பது சாத்தியமாகி இருக்காது. நான் பிரதமரானவுடன் செய்த முதல் வேலை, பொதுமக்கள் சேவை செய்யும் அனைத்து அலுவலகங்களில் ஏசி பொருத்தியதுதான்” என்று தெரிவித்திருந்தார்.

ஜப்பான்

ஆனால், இதில் ஒரு கசப்பான உண்மை இருக்கிறது. சூடான காற்றை வெளியேற்றி, நம் அறையை குளிரூட்ட முடியும்.

மேலும் இதற்கு தேவையான மின்சாரம் பெரும்பாலும் எரியூட்டப்பட்ட எரிவாயு அல்லது நிலக்கரியில் இருந்து எடுக்கப்படுகிறது.

நம் குளிர் சாதன வசதிகளை மேம்படுத்த பல விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப நிறுவனங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதே நேரத்தில், பூமியை சுத்தமாகவும், பசுமையாகவும் எப்படி வைத்துக் கொள்வது என்பது குறித்து பல நாடுகள் யோசித்து வருகின்றன.

கூரைகளில் வெள்ளை நிற வண்ணம் பூசுவது அல்லது வீடு கட்டும் பொருட்களில் மாற்றம் செய்வது என் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் பருவநிலை மாற்றம் வேகமாக நிகழ்ந்து வருவதாகவும், நாம் எடுக்கும் நடவடிக்கைகள் போதாது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். -BBC_Tamil