அன்ரன் பாலசிங்கத்தை புலிகளில் சிலர் ஓரங்கட்ட முயன்றனர்

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சமாதான நகர்வுகள் பற்றி விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்குள் முரண்பாடுகள் தோன்றியிருந்தன என்று இலங்கை அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்தார்.

இவ்வாறு 2002-ம் ஆண்டு அக்டோபர் முதலாம் தேதி அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அஸ்லிவில்ஸ் அனுப்பியுள்ள கேபிள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு;

சமாதான நடவடிக்கைகளின் போது இலங்கை அரசு தொடர்பாக அன்ரன் பாலசிங்கம் மென்போக்கோடு செயற்படுவதாகப் புலிகளின் ஒரு சாரார் கருதுகின்றனர்.

இலங்கையின் கிழக்கில் கடும் போக்குடைய கர்ணல் கருணா, கரிகாலன் ஆகியோருக்கும் வடக்கில் இருந்த புலிகளின் தலைமைக்கும் இடையேயான உறவில் பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரியவருகிறது.
 
இந்தத் தகவலை புலிகளின் தொடர்பாடலை ஊடறுத்துக் கேட்ட போது தெரியவந்துள்ளதாக மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். எனினும் அத்தகவலின் உறுதித் தன்மை பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.

சமாதான நடவடிக்கைகள் புலிகளின் இராணுவ தயார் நிலையை மோசமாகப் பாதித்திருப்பதாக புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்ணல் பானு உட்பட பலர் கருத்தினர். எந்த முடிவுகளையும் இறுதியாக புலிகளின் தலைவர் பிரபாகரனே எடுப்பார்.

எனினும் அவரின் முடிவுகளில் அதிக தாக்கம் செலுத்துவோராக கடும் போக்குடைய புலித்தலைவர்களே இருந்தனர். அத்தகைய கடும்போக்குடைய புலிகளின் தளபதிகளில் சிலர் சமாதான நடவடிக்கைகளில் இருந்து அன்ரன் பாலசிங்கத்தை ஓரங்கட்ட முயற்சித்தனர்.

இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அமெரிக்க அரச துறைக்கு அனுப்பியுள்ள கேபிள் தகவலை விக்கிலீக்ஸ் இணையம் இப்போது அம்பலப்படுத்தியுள்ளது.