நெருப்புடன் விளையாட வேண்டாம் – அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

தைவானுக்கு ஆயுதம் வழங்க உள்ளதாக அறிவித்த அமெரிக்காவுக்கு ”நெருப்புடன் விளையாட வேண்டாம்” என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசுமுறை பயணமாக ஹங்கேரி சென்றுள்ள சீனாவின் முக்கிய தூதர் வாங் யி’ (Wang Yi), அங்கு நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சீனா மற்றும் தைவான் ஆகியவற்றின் ஒருங்கிணைவை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனவும், இந்த விவகாரத்தில் தலையிட யாரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் கூறினார்.

தைவானுக்கு எம்1ஏ2டி (M1A2T) ஆப்ராம்ஸ் டாங்கிகள், ஸ்டிங்கர் ஏவுகணைகள் மற்றும் அதுதொடர்பான கருவிகளை, இந்திய மதிப்பில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளதாக, பெண்டகன் திங்கட்கிழமையன்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் தான் சீனாவின் முக்கியத்தூதர் நெருப்புடன் விளையாட வேண்டாம் என எச்சரித்ததன் மூலம் அமெரிக்கா மீதான கோபத்தை, வெளிப்படுத்தியுள்ளார். சீனாவிலிருந்து பிரிந்து சென்றாலும் தைவான், சீனாவின் ஒரு அங்கமெனவும், அதனை சீனாவுடன் இணைப்பதே குறிக்கோள் எனவும் அந்நாட்டு அரசு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in