டிரம்பின் எல்லைச்சுவர் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ இடையேயான எல்லைப்பகுதியில் சுவர் அமைக்கும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பின் கனவுத் திட்டத்தின் ஒரு பகுதிக்கு அனுமதியளித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், அந்நாட்டின் தெற்கு எல்லையில் சுவர் அமைப்பதற்கு தேவையான இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்களை பென்டகனின் நிதியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

முன்னதாக, எல்லைச்சுவர் திட்டத்திற்கு பென்டகனின் நிதியை பயன்படுத்துவதற்கு கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றம் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது இந்த எல்லைச்சுவர் திட்டத்தை முன்னிறுத்தியே டிரம்ப் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்திற்கு, அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தொடக்கத்திலிருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம், அந்நாட்டின் கலிஃபோர்னியா, அரிசோனா, நியூ மெக்ஸிகோ ஆகிய மாகாணங்களை ஒட்டிய எல்லைப்பகுதியில் சுவர் கட்டப்படும்.

இது ‘மிகப் பெரிய வெற்றி’ என்று தெரிவித்து டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். -BBC_Tamil