போகவும் வரவும் அம்னோ தங்குவிடுதி அல்ல- இஸ்மாயில் சப்ரி

கட்சியைவிட்டு வெளியேறிய அம்னோ பிரதிநிதிகள் மீண்டும் கட்சிக்குத் திரும்பிவர விரும்புகிறார்களாம். அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

திரும்பிவரும் அவர்களுக்காக அம்னோ கதவுகள் திறந்தே உள்ளன என்று அந்த பெரா நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

ஆனால், கட்சியில் அவர்கள் ஏற்கனவே வகித்த பதவிகள் திரும்பக் கிடைக்காது.

“சாபாவில் ஒருவர் திரும்பி வந்தார்.(முன்னாள் அம்னோ பாபார் தலைவர், ரகிம் இஸ்மாயில்). அம்னோவுக்குத் திரும்பி வருவோரை வரவேற்க ஆயத்தமாக இருக்கிறோம். ஆனால், கட்சிக்கென விதிமுறைகள் உண்டு.

“கட்சியிலிருந்து வெளியேறி மிண்டும் திரும்பி வர நினைப்போர் அம்னோ உறுப்பினர் என்ற நிலையிலிருந்துதான் தொடங்க வேண்டும்.

“முன்பு அவர்கள் தொகுதி அளவில் அல்லது கிளையில் உயர் பதவியில் இருந்திருக்கலாம் ஆனால், அது கவனத்தில் கொள்ளப்படாது.

“நினைத்த நேரத்துக்கு வரவும் போகவும் அம்னோ தங்கும்விடுதி அல்ல”, என இஸ்மாயில் சப்ரி ஃப்ரி மலேசியா டுடே-இடம் கூறினார்.