சிங்கப்பூர் பிரதமரின் சகோதரர் எதிர்க்கட்சிக்கு ஆதரவு

சிங்கப்பூர்  பிரதமர் லீ சியான் லூங்-குடன் உறவை முறித்துக்கொண்டிருக்கும் அவரின் சகோதரர் புதிதாக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் எதிர்க்கட்சியை ஆதரிக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை முகநூலில் பதிவிட்டிருந்த லீ ஹிசியான் யாங், தன் தந்தை லீ குவான் இயூ-வால் தோற்றுவிக்கப்பட்டு தன் சகோதரர் லீ ஹிசியான் லூங் தலைமையில் செயல்படும் மக்கள் செயல் கட்சி “அதன் பாதையைத் தவற விட்டுவிட்டது” என்றார்.

ஹிசியான் யாங், காலஞ்சென்ற தந்தையாரின் வீடு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து சகோதரர் லீ சியான் லூங் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

“நான் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் கொள்கைகளையும் விழுமங்களையும் முழுமையாக ஆதரிக்கிறேன்”, என்றவர் பதிவிட்டிருந்தார்.