உழைப்பாளி

உழைக்கும் பேரெல்லாம்
மனம் ஊனமாகி நிற்கின்றார்
உழைப்பில் கிடைத்த பொருளெல்லாம்
உயர்ந்தோர் கொள்கின்றார்!

ஒருவன் வாழ ஒருவன் வாட
மனிதன் செய்த விதியிது
தருவான் கூலி இறைவனென
மனிதநேயம் பேசுது!

உழைத்துழைத்து உடல், மனம்
களைத்து நிற்கும் வறியரே!
உரக்கப்பேசி உரிமை கேட்டால்
மலைத்திடுவர் பெரியரே!

உள்ளவெப்பம் ஒன்று திரட்டி
எரிமலையென வெடிப்பீர்!
கள்ளவழி பொருள் சேர்த்த
கயவரெல்லாம் மடிவீர்!

உழைக்கும் வர்க்கம் கூடி
ஒற்றுமையாய் வாழ்வீர்!
உழைத்தகூலி உரிமையென
கேட்டுப் பெற்றுக் கொள்வீர்!

இயற்கையன்னை தந்த செல்வம்
அனைவருக்கும் பொதுவே
இறைவன் படைப்பில்
உயர்வு தாழ்வு இல்லை
உணர்வாய் இதை மனமே

  • விஷ்ணுதாசன்